(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.14. தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்

மாணவரியல்

15. இரவு விலக்கல்

(இரவு-யாசித்தல்)

  1. இரவென் பதுபிறர் தரவொன் றேற்றல்.

இரவு என்பது பிறர் நமக்குத் தருவதை ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.

  1. இரவினிற் றாழ்ததொன் றிலையென மொழிப.

இரத்தலை விட தாழ்ந்தது வேறொன்றில்லை என்று கூறலாம்.

  1. இரவினிற் களவு மேற்றமா மென்ப.

இரத்தலை விட களவு செய்தல் சிறந்தது என்று கூறலாம்.

  1. இரந்திடப் படைத்தவன் பரந்தழி கென்ப.

உயிர்களை இரந்து வாழுமாறு படைத்தவன் (இறைவன்) பல இடங்களுக்கும் சென்று இரந்து அழிவானாகுக.

  1. இரந்துயிர் வாழ்தலி னிறத்தனன் றென்ப.

இரந்து உயிர்வாழ்வதை விட இறத்தல் சிறந்தது ஆகும்.

  1. அவருரை யெல்லா மழியா வுண்மை.

இவை எல்லாம் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய(அழியாத) உண்மை ஆகும்.

  1. இரந்துயிர் வாழ்தலிங் கிழிவினு ளிழிவே.

இரந்து உயிர் வாழ்வது இழிவான செயல்களுக்குள் இழிவானது ஆகும்.

  1. தமக்குவாழ் வாரதிற் சாதலு நன்றாம்.

தமக்காக இரந்து வாழ்வதை விட இறத்தல் சிறந்தது ஆகும்.

  1. பிறர்க்குவாழ் வாரதாற் பிழைத்தலு நன்றாம்.

பிறருக்காக இரந்து வாழ்பவர்கள் உயிர் வாழ்வது சிறந்தது ஆகும்.

  1. அவரு மதைவிடி னரும்பெருஞ் சிறப்பாம்.

பிறருக்காக இரப்பவர்களும் இரத்தல் தொழிலை விட்டுவிட்டால் அது மிகவும் மதிப்பிற்குரிய சிறந்த செயலாகும்.

வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum