67.சனாதனம் என்பது, அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் அடையாளமாகும் – கண்ணதாசன் 68. இந்து தருமம் என்பதற்கு மிகவும் பொருத்தமான சொல் சனாதனம் 69. இந்து தருமம் மட்டுமே சனாதனம் – இராமகிருட்டிணர். இப்பொய்மையைக் காண்போம் – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 65-66 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 67-69
- ? 67 சனாதன தருமம் என்பது, அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் ஓர் ஆன்மிக அடையாளமாகும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், சேவை செய்தல், தொன்மையானது, நிலையான நெறிமுறைகளைக் கொண்டது என்பதே சனாதன தருமமாகும். இவ்வாறு கண்ணதாசன் கூறுகிறாரே!(அருத்தமுள்ள இந்து மதம்)
o நிலையானதாகக் கூறப்படும் கருத்துகள் எல்லாம் தவறு என்று முன்பே சொல்லியுள்ளோம். அனைவருக்கும் பொதுவான கடமை, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தல் என்பனவெல்லாம் ஆரிய நெறிக்கு மாறானவையே. தமிழ் நெறியைச் சனாதனமாகக் கூறுவது பச்சைக் கயமையாகும். இறைப்பற்று மிகுந்தவர்கள், சனாதனம் என்ன சொல்கிறது என்று அறியாமல் நல்ல கருத்துகள் எல்லாம் சனாதனம் எனத் தவறாகப் புரிந்து கொண்டு அதைப் பாராட்டுகிறார்கள்.
o- ? 68. இந்து தருமம் என்று இன்று நாம் அழைக்கும் பெயருக்கு மிகவும் பொருத்தமான சொல் சனாதன தருமம் என்பதே.
இந்து சமயம் என்று தற்போது அழைக்கப்படுவது, இதன் உண்மையான பெயர் அன்று. காலத் தொடக்கம் அற்ற இந்த வாழ்வியல் தருமத்திற்கு வரலாற்றுக் காலத்தில் வைக்கப்பட்ட பெயரே இந்து என்பதாகும். அநாதியான வேதங்களில் இந்தத் தருமம் வேர் கொண்டிருக்கிறது. இது நிறுவப்பட்ட மதமும் அல்ல. ஆர்யவருத்தத்தில் முனிவர்களின் இறை அனுபவத்தால் விளைந்த இனிய கனி இது. வைதீக சமயம் என்றும், வேதாந்தம் என்றும்கூட இது அழைக்கப்படுகிறது…. என்று சாய்பாபா கூறுகிறாரே!
இந்து மதமும் சனாதன தருமமும் ஒன்று என்னும் பொழுது எப்படி சனாதனம் என்பது எல்லா மதத்திற்கும் பொதுவானதாக இருக்கும்? வேதங்களில் வேர் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆரிய வேத நெறி என்பது எல்லா உயிர்களையும் சமமாக எண்ணும் தமிழ்நெறிக்கு மாறானதல்லவா? அப்புறம் தமிழ்நெறியைச் சனாதம் என்பது வடிகட்டிய பொய்தானே!
இந்து மதமும் சனாதனமும் வேறு. இது குறித்துத் திருக்குறள் தலைமைத் தூதர் முனைவர் கு.மோகன்ராசு பின்வருமாறு விளக்குவதைக் காணுங்கள்.- இந்து என்பதற்கான வரையறை:
இந்தியாவில், கிறித்தவர்கள் இசுலாமியர்கள் அல்லாத அனைவரும் இந்துக்கள் என ஒரு வரையறை உள்ளது.
இவர்களுள் சமணர்கள், பௌத்தர்கள், உலகாயுதர்கள், ஆசிவகர்கள் ஆகியோர் சனாதனத்தை எதிர்ப்பவர்கள்.
சைவர்கள் சனாதனத்தை ஏற்காதவர்கள்.
வைணவர்கள் ஓரளவு ஏற்பவர்கள்.
இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள சூத்திரர்களுக்கு எந்த வகையிலும் சனாதனம் சாதகமாக அமையாத ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் சனாதனத்திற்கு உரியவர்களாக அமைபவர்கள் பிராமணர்கள். அவர்கள்தான் சனாதனத்தில் பிதாமகர்கள்.
இந்த நிலையில் சனாதனம் என்பது பிராமணம் அல்லது பார்ப்பனம் எனக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இந்து தருமம் வேறு சனாதனம் வேறு எனக் கொள்ள வாய்ப்பு உள்ளது. - ? 69. “இந்து தருமம் மட்டுமே சனாதன தருமம் ஆகும்.” என்கிறாரே இராமகிருட்டிணர்.
o “இந்து தருமம் மட்டுமே சனாதன தருமம் ஆகும். பல்வேறு சமய நம்பிக்கைகள் இப்போது நிலவலாம். அவை யாவும் இறைவன் திருவுள்ளம் உள்ள வரை மட்டுமே வாழும். இந்து தருமம் மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்” என்கிறாரே இராமகிருட்டிணர். (சிரீ இராமகிருட்டிணரின் உபதேசங்கள், சிந்தி பிரம்ம சமாசத்துக்கு விசயம் – அத்தியாயம்- 32).
மீண்டும் மீண்டும் இந்து தருமம்தான் சனாதன தருமம் என்பதை நன்கு கவனியுங்கள். மக்களிடையே உயர்வு தாழ்வைக் கற்பிக்கும், மக்களுள் ஒரு பிரிவினரை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்தும் , ஆரிய இந்து எங்ஙனம் உலகத்திற்குப் பொதுவான அறமாகத் திகழமுடியும்? எனவே, சனாதனத்தை உலகிற்கே பொதுவாகக் கூறுவதைப் பெருந்தவறாக உணரலாம் அல்லவா?
o பின்னால் வந்த மதமான இந்து மதத்தை மட்டும் வாழச்செய்யும் எல்லார்க்கும் பொதுவான இறைவன் அதற்கு முன்னாலும் பின்னாலும் தோன்றிய பிற மதங்களை மட்டும் அழிப்பானா? எனவே, பிற சமய நம்பிக்கைகளும் வாழும். அவற்றிற்கு எதிரான சமய மறுப்பு நம்பிக்கைகளும் வாழும்.- ‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ எனக் கேள்வி எழுப்பிய வள்ளுவம், சனாதனத்தின் சாட்சி. – சரியா?
கற்பவர் கற்பித்தவரைத் தொழ வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். வாலறிவன் என்றால் தூய அறிவை உடையவன். அஃதாவது தூய அறிவையுடைய கல்வி தந்த ஆசிரியர். இல்லை இல்லை. கடவுளைத் தொழ வேண்டும் என்கிறார் என்றாலும் தவறில்லை. ஏனெனில், கீதை கிருட்டிணனைத்தான் தொழ வேண்டும் என்கிறது. சனாதனம் பிராமணர்களைத் தொழ வேண்டும் என்கிறது. எனவே, சாதி வேறுபாடின்றி நமக்குக் கல்வி தருபவரைத் தொழச் சொல்லும் திருவள்ளுவரைச சனாதனத்தின் சாட்சி என்பது அறிந்தே பொய் பரப்பும் கயமைத்தனமாகும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக்.95-97
Leave a Reply