No-alcohol01

கடைநிலை மாறுமா ?

 

மது கொடுக்கும் மயக்கத்தால்

மதியிழக்கும் மாக்களெல்லாம்

நிதியிழப்பார் ,  மன நிம் –

-மதியிழப்பார் ,

குடல் கெட்டு , உடல் கெட்டு

உயிரிழப்பார் .குடும்பத்தார்

கதியிழப்பார் ,

மங்கலப் பெண்டிரெல்லாம்

மங்களம் இழப்பார் ,

மண் கலமாய் உடைந்திடுவார்

மகன்கள் கல்வியிழப்பார் ,

மகள்கள் மணமிழப்பார் .

சந்தடி ஏதுமின்றி

சந்ததியே   மறைந்துவிடும்.

இரக்கமின்றி அழிக்கும்

அரக்கன் என்பதனால்தான்

ஆங்கிலத்தில் ‘ ARRACK ‘

என்றழைத்தாரோ .

‘குடி குடி கெடுக்கும் ‘ என்று

பொடி எழுத்தில் எழுதிவிட்டு

மடிப்பணத்தை எல்லாம்

நொடிபொழுதில் எடுத்திடும்

தடை செய்ய வேண்டிய அரசே

கடை விரித்து, காசு பார்க்க

மடைதிறந்த வெள்ளமென

மதுவை ஓடவிடும்

கடைநிலை மாறுமா ?

காலம் பதில் கூறுமா ?

சட்டமொன்றும் உதவாது

சாத்திரங்கள் உரைக்காது

சுய ஒழுக்கம் அன்றி வேறு

சூத்திரங்கள் இல்லை.

அவனியெங்கும்

பவனி வந்து

தரணியெங்கும்

பரணி பாடும்

மது ஒழிக்க வாரீர்.

மனது வைத்துப் பாரீர் .- அதன்

மகத்துவத்தைப் பாரீர்!.

No-alcohol02

 – சிலேடைச்  சித்தர்சேதுசுப்ரமணியம்