சுவையமுதே ! தித்திக்கும் சொல்லோவியமே !

 

ஆதிமுதல் தாயே! அருந்தமிழே ! நல்வாழ்த்து !

சாதிவரு முன்னே தமிழ்நாட்டில் மக்கள்

 

பிறந்து சமத்துவமாய்ப் பேருலகில் வாழச்

சிறப்புடனே பெற்றெடுத்த செந்தமிழே நல்வாழ்த்து !

 

கண்ணகியைப் பெற்றெடுத்துக் கற்பின் திறங்காட்டி

மண்ணுலகைச் சீர்படுத்தும் மாணிக்கச் செந்தமிழே!

 

ஔவைமூ தாட்டி அறம்பாடக் கூழுட்டிச்

செவ்வை புறவளர்த்த செந்தமிழே நல்வாழ்த்து !

 

போரில் புறங்கொடுத்த புல்லன் மகனென்றால்

மார்பறுக்கத் தான்துணியும் மங்கையினைப் பெற்றவளே !

 

தாய்நாடு வாழத் தனதருமைச் சுற்றமெலாம்

போய் வீரப் போர்புரியப் போக்குந் திருமகளை

 

ஊட்டி வளர்த்தவளே ! ஓங்கு பெருமையினை

நாட்டிச் சிறப்படைந்த நற்றமிழே வாழ்த்து !

 

திருமறைசொல் வள்ளுவர்க்கும் தேர்ந்தகபி வர்க்கும்

பெருமையுறுந் தாயான பெண்ணணங்கே வாழ்த்து

 

முடிமன்னர் மூவருக்கும், முன்வாயில் வந்து

படிமிதித்த ஏழை பசிதீர்க்கும் வள்ளலர்க்கும்

 

நல்லன்னை யாகி நலம்புரியும் செந்தமிழே !

பல்லுலகும் போற்றும் பழந்தமிழே வாழ்த்து !

 

கனிபோலே நல்ல கனிரசத்தைப் போலே

இனிதான செந்தமிழே ! எங்கள் பெருந்தமிழே !

 

கற்கண்டு போலே கருப்பஞ்சாற் றைப்போலே

சொற்சுவையும், சொல்லின் பொருட்சுவையும் சொக்கும்

 

கவிச்சுவையும் சேர்ந்திருக்கும் கற்பனையைக் காட்டும்

சுவையமுதே தித்திக்கும் சொல்லோ வியமே !

 

அறப்புலவர் சான்றோர் அணிவகுத்து நின்று

புறங்காக்க வாழ்வடைந்து புல்லறி வாளர்களின்

 

சூழ்ச்சி தவிடாக்கித் தொன்றுமுதல் இன்றுவரை

வீழ்ச்சியின்றி வாழ்ந்து விளங்கும் பெருமாட்டி !

 

என்றும் இளமையினை ஏற்றுத் திகழுகின்ற தென்றமிழ்த் தாயே !

நற் றேன்பெருக்கே நல்வாழ்த்து !

 

பொய்யா நெறிகாட்டிப் புத்துலக வாழ்க்கையினைச்

செய்தாயே வாழ்க சிறந்து.

-பாவலர் நாரா. நாச்சியப்பன்