(தமிழ்த்தாய் வணக்கம் 1-5 தொடர்ச்சி)

 

தமிழ்த்தாய் வணக்கம் 6-10

 

மஞ்சள் முகமலர்ந்து மாதர் கரும்புமொழி

கொஞ்சி வழங்கக் குதுகலிக்கும்-நெஞ்சுடனே

சங்கொலித்துப் பால்பொங்கும் தைத்திருநாள் இன்றுனது

பங்கயத்தாள் சார்ந்தோம் பணிந்து! (6)

 

இன்னமு தாகிய என்னனே யேஉனை

என்னித யாசன மேற்றினேன்-கன்னலின்

செந்தமி ழாகிய தேன் கவி பாய்ந்திட

வந்தருள் செய்கவே வாழ்த்து. (7)

 

வாழ்த்துகவி யாலிந்த் வையக முற்றுமே

ஆழ்த்துவேன் இன்பநல ஆக்கமெலாம்-சூழ்ந்திடவே

நன்னெறியே பாடி நலஞ்சேர்ப்பேன் எந்நாளும்

உன்னருளே தாராய் உவந்து. (8)

 

தமிழ்படித்த தாலிவர்கள் தாழ்ந்தோர் எனவே

நமைப்பழித்தார் எல்லாமிந் நாட்டில்-அமைதியொடு

வாழ விடுங்கொடுமை நாட்டில் மறைந்தொழிய

ஆளவரு வாய்நீயம் மா! (9)

 

பாழும் பகைசூழ்ந்து பைந்தமிழின் வேரறுத்து

வாழும் நிலைகண்டேன் வையத்தே-தாழும்

தமிழர் கிளர்ந்தெழவே தாயே நின் சக்தி

அமிழ்தை வழங்கி யருள். (10)

(தொடரும்)

பாவலர் நாரா. நாச்சியப்பன்