kavimani_thesikavinayakam01

என்றும் தமிழ்மக்கள் யாவரும் ஒத்திணங்கி,

ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்; – அன்றெனில்,

மானம்போம், செல்வம்போம், மானிட வாழ்விற்குரிய

தானம்போம், யாவும்போம், தாழ்ந்து.

பண்டைத் தமிழர் பழம்பெருமை பாடிஇன்னும்

மண்டை யுடைத்து வருந்துவதேன்? – அண்டும்இக்

காலத்திற் கேற்றகல்வி கற்றுக் கடைப்பிடித்து

ஞாலத்தில் வாழ்ந்திடுவோம் நன்கு.

 வாணிகம் செய்வோம்; வயலிற் பயிர்செய்வோம்;

காணரிய கைத்தொழிலும் கண்டு செய்வோம் – பேணிநம்

சந்தத் தமிழ்வளர்ப்போம்; தாய்நாட்டுக்கே உழைப்போம்;

சிந்தை மகிழ்ந்து தினம்.

 தெய்வம் தொழுவோம்; திருந்தத் தமிழ்கற்போம்;

செய்வினையும் நன்றாகச் செய்திடுவோம் – ஐயமின்றி

எவ்வெவ் வறமும் இனிது வளர்த்திங்குச்

செவ்வையுற வாழ்வோம் தினம்.

–  கவிமணி தேசிகவிநாயகம் (பிள்ளை)