oct25

நாமேடை தமிழ் நாடாக்கும் நடைமேடை; சிந்தனையோ

பூமேடை; கருஞ்சிவப்பாய்ப் பூத்தவிழி இந்திக்குத்

தீமேடை; புகழுக்குத் தெருவெல்லாம் மணிமேடை;

கோமேடைப் பழங்காஞ்சிக் கொற்றவன்தான் குணமேடை.

முக்கோணத் தமிழகத்தின் முழுக் கோணல் நீக்குகிற

தெக்காணப் புதுச்சிற்பி; திருக்குறள்போற் சிறுவடிவம்;

எக்கோண மும்நோக்கும் இயல்பறிவு; தூக்கியதோர்

கைக்கோணத் துள்இளைஞர் கடற்கோணப் பெருந்தேக்கம்.

ஒருமைப்பா டென்று தமிழ் ஒழிக்கவரு வார்க்கெதிரே

ஒருமெய்ப்பா டில்லாமல் உலவுகிற தமிழரிடை,

பெருமைப்பா டொழியாத பெருகுதமிழ் மறத்திற்கு

வறுமைப்பா டில்லையென வாழுகிற அகச்சான்று.

‘நாடெ’ன்பான், ‘நமதெ’ன்பான்; நறுந்தமிழ்க் கிடும்பையெனில்

‘வாடெ’ன்பான், ‘தூக்கிடுபோர் வா‘ ளென்பான்; மொழிகாத்தல்

‘பீடெ’ன்பான், தமிழ் மானப் பிழிவென்பான்; வரலாற்றின்

ஏடென்ப துள்ளவரை இறப்பினையே வென்றிருப்பான்.

இளந்தமிழர்க் கொருதலைமை; இளம்பரிதிக் கோருவமை;

தளர்ந்தவருக் குணர்வூட்டித் தனித்தினவுக் குணவூட்டும்

களத்தலைமை; தமிழ்ப் புலவர் கவித் தலைமை; நம்மடிமைத்

தளைவிலக்க வருமறிஞன் அண்ணாவே தலைத் தலைமை!

குறள்நெறி(மலர்1 இதழ்17): ஆவணி 31, 1995/15.09.1964

 http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/02/kuralneri02-250x75.jpg