நம்பிக்கையுடன் எழு! : கி.பி. அரவிந்தன்
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2022/06/thalaippu-nambikkaiyudan-ezhu-ki.pi_.aravinthan.jpg)
நம்பிக்கையுடன் எழு!
மலைகளில் உரமாய்த்
தேநீரில் இரத்தமாய்
முகமற்றுப் போனோரே
கவனித்தீர்களா?
பனிப் படலங்களை
ஊடுருவும்
எக்காள ஒலிகள்.
சிங்கத்தின் வாள்
இனி
உடைபடக்கூடும்.
அதோ.
வயல்வெளி எங்கும்
தலை நிமிரும் நெற்பயிர்கள்.
வசந்தன் கூத்தின்
நாயகர்கள் ஆட்டம்.
இவனோ நண்பன்.
பனைகள் மறைக்கும்
செம்மண் பரப்பு.
பனங்காட்டுச் சலசலப்பு.
ஓலைகள் உராய்வினில்
அக்கினிக் குஞ்சுகள்.
அவற்றுக்கும் அப்பால்
அலைகளின் சீற்றம்,
முரல்களின் துள்ளல்.
அம்பாப் பாடல்களில்
சோகம் தொலைக்கும்
ஏலேலோப் பாடகர்கள்.
நண்பர்கள் . . .தோழர்கள். . .
“ஆறுகள் முன்னோக்கியே
பாய்கின்றன”
அப்புறமென்ன!
அடர்ந்த மலைகளின்
இருட்டினில் இருந்து
தேநீர் கரங்களில்
விலங்குகள் கழற்று.
பனி மலைகளின்
உச்சிகள் பிளந்து
கலவியைத் தொடங்கு,
சக்தியை உமிழ்,
உழுத்த மாளிகையின்
இடுக்குகள் எங்கணும்
ஆலம்விதைகள்.
நம்பிக்கையுடன்
எழு. . . .
-கி.பி. அரவிந்தன்
Leave a Reply