maramsaaynthaghu

மரம் சாய்ந்து போனதம்மா – அரங்க கனகராசன்

 [காதல் மணம்… கண்ணாளனைப் பொய்வழக்கில் சிக்கவைத்து சிறை அனுப்புகின்றனர் மணமகளின் தந்தை… சிறைவாசம் முடிந்து, திரும்பியபோது மனைவி ஓராண்டு கைகுழந்தையோடு இருக்கிறாள்… மனத்தால் இணைந்த இருவரும், மீண்டும் ஊருக்குத் தெரியாமல் ஓடுகின்றனர்… மோப்பம் பிடித்த, மணமகளின் தந்தையோ, தானூர்தி வரும் பாதையில், வெட்டிய மரம்தனை சாய்க்கிறார்… தானூர்தி நொறுங்குகிறது… கூடவே காதலர் இருவரும் மரணம் தழுவிட, இருவரது சடலமும் இரத்தம் தோய்ந்து தெருவில் கிடக்கிறது… இது எதுவுமே அறியாத பச்சிளங்குழந்தை, தாயின் மார்பை கவ்வுகிறது, பசிக்காக…

-இது ஒரு குறும்படம் …

இப்படத்தின் இச்சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட பாடல் இது:-]

மரம் சாய்ந்து போனதம்மா
மாங்கனி அறியவில்லை…

குரல் சோகம் ஆனதம்மா
பூங்குயில் அறியவில்லை…

புதியதோர் சொற்கள் சொல்லி
இனித்திடும் முத்தங்கள் தந்து
மனங்கவர் சந்தங்கள் பாடி

உறங்க வைத்த அன்னையிங்கே
உறக்கம் ஆனாளே…
உறக்கம் ஆனாளே…
தவிக்குதம்மா கைக் குழந்தை
தாலாட்ட இனி வருவாளோ…

கொடி சாய்ந்துப் போனதம்மா
பூக்கள் அறியவில்லை…

நதி மாறியே போனதம்மா
மீன்கள் அறியவில்லை…

முகிலை நிலவை ஊர்வலம் ஆக்கி
அமுதமழையில் பசியைப் போக்கி
இரவும் பகலும் இமையாய்க் காத்து

இனியவன் வருகையை எதிர் நோக்கி
புதிய உலகின் பயணம் பார்த்து
புறப்பட்டக் காதலும் கண்ணீராச்சே
பூந்தளிர் அறியலையே!

அரங்க கனகராசன்-கனகு