eezham02

விதியே, விதியே, தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்

தன்மையும் தனது தருமமும் மாயாது

என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்

வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று

உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச்

….. ….           …..             …     …..

 சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?

‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?

வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?

விதியே, தமிழச் சாதியை எவ்வகை

விதித்தாய்’ என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.

ஏனெனில்,

“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்

ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,

‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்

கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்

முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்

சாதியை அமரத் தன்மை வாய்ந்தது” என்று

உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்

சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்

உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்

கண்டுஎனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள

பற்பல தீவினும் பரவி யிவ்வெளி்ய

தமிழச் சாதி, தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்

பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்

இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்!

 …      …       …    ….

விதியே! விதியே! தமிழச் சாதியை

என்செயக் கருதி யிருக்கின் றாயடா?

– மாக்கவி பாரதியார்

 Bharathi03