ulakaamaithi_worldpeace_muthirai01

சமயத்தின் பெயரால் சண்டை 

சாதியின் பெயரால் சண்டை

குமைகின்ற உள்ளங் கொண்டார்

குழப்பமே செய்வார் நாளும்

அமைதியை எண்ணிப் பாரார்

ஆரையும் மனதில் கொள்ளார்

அழித்தலை மட்டும் நாடி

அனைத்தையும் ஆற்ற வந்தார்

வெறி தலை கொண்டதாலே

நெறி தனை மறந்தேவிட்டார்

அறி வெலாம் மங்கிப்போக

அரக்கராய் மாறி விட்டார்

தூய்மையாம் சமயம் தன்னை

தூய்மையாய் பார்க்கா நின்று

பேயென உருவம் கொண்டு

பிணக்காடாய் மாற்று கின்றார்

கடவுளின் பெயரைச் சொல்லி

கருணையை வெட்டி வீழ்த்தி

தெருவெலாம் குருதி ஓட

செய்கிறார் நாளும் எங்கும்

குண்டுகள் வெடிக்கும் வேளை

குரூரமே நிகழும் அங்கே

மண்டைகள் சிதறி மண்மேல்

வாரியே உதிரம் ஓடும் 

மருத்துவச் சாலை கோவில்

முதியோர் தங்கும் இல்லம்

சித்தத்தில் வைக்கா வண்ணம்

சிதைக்குமே வைத்த குண்டு

எத்தனை உயிர்கள் போயும்

இரக்கமே வாரா நிற்கும்

அத்தனை அரக்கர் தம்மால்

அகிலத்தின் அமைதி போச்சே

ஆதியென நிற்கின்ற கடவுள்தானும்

அரக்ககுணம் கொண்டாரை அருகில்வையார்

பேதமெலாம் கடவுளுக்கு இல்லையப்பா

பேய்மனத்தை ஆண்டவனும் ஏற்கமாட்டான்

ஆண்டவன் படைப்பில் நாங்கள்

அனைவரும் மனிதர் அன்றோ

வேண்டாத அழிவைச் செய்து

விளைந்தது என்ன கண்டீர்

ஆண்டவன் படைத்த இந்த

அற்புத அகிலம் தன்னில்

அமைதியை காப்போ மானால்

ஆனந்தம் அடைவோம் நாளும்

வேண்டிய விதத்தில் வாழ

விண்ணையும் தொட்டு நிற்க

ஆண்டவன் அருளைப் பெற்று

அகிலத்தில் அமைதி காப்போம்

காட்டேறி போலிருக்கும் காட்டுமிராண்டிகளே

கடவுள் தந்தபூமிதனை கந்தகமாய் ஆக்காதீர்

அறநெறியில் வாழுங்கள் அருளதனைப் பேணுங்கள்

அகிலமெங்கும் அமைதிதனை ஆக்கிடுவோம் வாருங்கள் !

M.Jayarasasarma01

தரவு  : முதுவை இதயத்து