அவியினும் வாழினும் என்? – தமிழ்சிவா

 

வா
சாதித் தேரிழித்து
நடுத்தெருவில் நிறுத்து
இல்லாதோர் இயலாதோர்
வீடு வாசல் கொளுத்து !

எடு
கசடுகளே தலைவனெனப் புகழ்ந்து
விழா எடு !

விடு
மானம் பழம் அறிவு புகழ்
பீடோடு பிறவும் விடு!

செய்
பாழும் சிலைக்குப்
பாலூற்றிப் பரவல் செய்!
வாழும் தொண்டர்க்கு
வரிசையுடன் பாடைசெய்!
பெருமக்கள் காட்டிய நல்வழியைப் பெருவிருப்புடனே  நிரவல் செய்!

தடு
தமிழினத்தில் யாரேனும்
தகுதியால் உயர்ந்தாலும்
உள்ளுக்குள் நல்லறிவு தன்மானம்
புகுந்தாலும்
ஓடோடித்தடு!

நடு
பொதுத்தெருவில் சாதிப்பலகை
‘நச்சு’ என நடு!

அழி
காடு கழனி கடல்
ஆறு மலை
அன்னைமொழி உட்பட  அத்தனையும்
மீண்டெழாதபடி அழி!

செழி
செல்வாக்கு பதவி
சிவப்புப்பணம் யாவும் பெற்று

போ
புகழ்மணக்க
அசிங்கத்தை அள்ளியள்ளிவீசு

நீதான்  இழுக்கு
உன்னைவிட  உயர்ந்தது
என்னுடலில் திரண்ட  அழுக்கு!

சீ போடா
மூளைச்சாவு வந்தபின்னும்
இருக்கின்றாய் நீ இன்னும்!

                                       தமிழ்சிவா