தலைப்பு-கல்வியேகண்-கி.பாரதிதாசன் : thalaippu_kalviyekan_ki.bharathidasan

“கல்வியே கண்”

 

 

செல்லும் இடமெல்லாம் சீர்களைச் சேர்த்திட

வெல்லும் அடலேறாய் விஞ்சிட – தொல்லுலகில்

யாண்டும் புகழ்பரவத் தீண்டும் துயரகல

வேண்டுமே கல்வி விளக்கு!

சாதிச் சழக்குகளை மோதி மிதிக்கின்ற

நீதி நிலத்தில் நிலைத்திட! – ஆதியிலே

ஆண்ட அறநெறிகள் மீண்டும் அரங்கேற

வேண்டுமே கல்வி விதை!

கல்வி உடையவரே கண்ணுடையர் என்றழகாய்ச்

சொல்லி மகிழும் சுடர்க்குறளே! – முல்லைமலர்க்

காடொளிரும் வண்ணம் கருத்தொளிர, எப்பொழுதும்

ஏடொளிரும் வண்ணம் இரு!

நல்லோர் திருவடியை நாடி நலமெய்த!

வல்லோன் எனும்பெயர் வந்தெய்த! – அல்லல்

அகன்றோட! அன்பாம் அமுதூறக் கல்வி

புகுந்தொளிர வேண்டும் புலம்!

கற்க வயதேது? கற்ற நெறியேற்று

நிற்க குறையேது? நெஞ்சுற்ற – தற்செருக்கு

விண்ணொளி கண்ட வெண்பனி போல்மறையும்!

ஒண்மதி கல்வி உடைத்து!

உண்மை ஒளியினையும் ஓங்கும் வடலூரார்

வண்மை வழியினையும் மாண்பினையும் – வெண்மை

மலரொக்கும் நெஞ்சினையும் வாய்த்துமகிழ் வெய்த

மலையொக்கும் கல்வியுடன் வாழ்!

பிறப்பொக்கும் நன்னெறியைப் பேணி உலகோர்

சிறப்பொக்கும் வாழ்வில் செழிக்க! – நிறைகல்வி

ஒன்றே உயர்மருந்தாம்! நன்றே இதைஉணர்ந்தால்

அன்றே அமையும் அரசு!

படத்தில் நடிக்கும் நடிகரைப் பார்த்துக்

கிடக்கும் செயலொழிய! கீர்த்தி – படைக்கும்

நிலைகாண! நீண்ட நெடும்பார்வை காண

கலைகாண கல்வியே கண்!

எல்லாம் இழந்தாலும் என்றும் உடனிருக்கும்!

கொல்ஆள் வினைக்கும் குழிபறிக்கும்! – சொல்லாலும்

தீயாலும் போகா! தெளிந்து படித்திட்டால்

ஓயா தொளிரும் உயிர்த்து!

பெருஞ்செல்வம் பேரரணிகள் பெற்றாலும், ஈடில்

அருஞ்செல்வம் கல்வி அறிக! – வருஞ்செல்வம்

குன்றிக் குறைந்திடலாம்! கற்றவை நம்முயிரோடு

ஒன்றி இருக்கும் ஒளிர்ந்து!

 

 

 

 பாட்டரசர் கி. பாரதிதாசன்

 

http://bharathidasanfrance.blogspot.in/2014/07/blog-post_83.html