Jpeg

சீறிப் பாய்வேன் தமிழாலே!

காற்றும் மழையும் அழித்தாலு்ம் – என்

கவிதைக் கனலுக் கழிவில்லை

ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை – இனி

உறைக்குள் போட மனமில்லை

மண்ணும் மலையும் சரிந்தாலும் – என்

மானிடப் பார்வைக் கழிவில்லை

விண்ணும் கடலும் திரண்டாலும் – என்னுள்

விரியும் கவிதைக் கழிவில்லை

வெட்டிப் பொழுது போக்குவதை – நான்

வீணாய் என்றும் கழித்ததில்லை

கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி -என்றும்

கூர்மை வாளாய் க் களமிறங்கும்

சொல்லும் பொருளும் உள்ளவரை – என்னுள்

தொடரும் சமூகச் சிந்தனைகள்

வெல்லும் என்கவி எனச்சொல்லி – நான்

வித்தகம் பேச வரவில்லை

அல்லும் பகலும் கண்டவற்றை – என்

அகத்தின் காயமாய் உணர்ந்ததனால்

செல்லும் வழியைச் சீராக்க – நான்

சீறிப் பாய்வேன் தமிழாலே!

(1968)

-முனைவர் இராம.குருநாதன்

இராம.குருநாதன் கவிதைகள்

பக்கம் 21