bharathidasan10

”காங்கிரசா தமிழைக் காத்தது?”

செத்தவட மொழியினில்

செந்தமிழ் பிறந்ததென்று

பொய்த்திடும் வையாபுரிகள் போக்கினையும் ஆதரித்த

கத்துநிறை காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென்று புகன்றனை நாணமில்லையா?

செம்பொனிகர் பைந்தமிழைத்

தேர்ந்துணரா டீ.கே.சி.யைக்

கம்பனென வேஅணைத்த கல்கியினை ஆதரித்த

வம்புமிகும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென வரைந்தனை வெட்கமில்லையா?

தாய்மொழி இலக்கணத்தைத்

தாக்கிஒரு கம்பனுயர்

தூய்கவி அலைக்கழித்துச் சொற்பிழைக்கும் டிகேசியைப்

போய்உயர்த்தும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென்று புகன்றனை அறிவில்லையா?

காளையர்கள் ஓதுதமிழ்க்

கல்வியையும் பெற்றறியா

மூளிகளைக், காப்பிக்கடை முண்டங்களை நல்லஎழுத்

தாளரெனும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென்று புகன்றனை உணர்வில்லையா?

கூறுதமிழ் சொல்லாக்கக்

குழுவினர் என்று சொல்லி

மாறுபட்ட வடசொல்லில் மாற்றுவதை ஆதரிக்கும்

வீறுதவிர் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென்று விள்ளுகின்றாய் மேன்மையில்லையா?

துய்யதமிழ் மறைமலை

சோமசுந்த ரம்திருவி

எய்துகலி யாணம், பல இன்தமிழ்வல் லார் இருந்தும்

நொய்களைச்சார் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென்று நுவன்றனை? கருத்தில்லையா?

வண்தமிழை எம்முயிரை

வடசொல்லி னால் அழிக்க

எண்ணிடுவார் தமக்கெல்லாம் ஏற்றமதைத் தேடிவந்த

திண்மையற்ற காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென்று செப்பலுற்றாய் செம்மை இல்லையா?

தாயகத்திற் கேவணக்கம்

என்பதைவந் தேமாதரம்,

தூயதிரு என்பதைஸ்ரீ என்றுரைக்க தோது செய்த

தீயசட்டக் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென்று சேப்பலுற்றாய் சீர்த்தி இல்லையா?

இந்துவெல்க என்பதனை

செய்க‌ிந்து என்பவர்க்கும்

நந்தமிழ்ச்சொல் வணக்கத்தை நமசுகாரம் என்பவர்க்கும்

தந்தினம்சொல் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென்று சாற்றவந்தாய் தகவில்லையா?

கோயில்மண வாயில்களில்

கொஞ்சுதமிழ் நீக்கித்தங்கள்

தீயவட சொல்புகுத்தும் தெக்கணாமுட்டி கட்கெல்லாம்

போய்அளக்கும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென்று புகன்றனை கண்ணுமில்லையா?

காலமெலாம் விடுதலை

காணவுழைத் தோம்என்பவர்

ஏலுந்தமிழ் கட்டாயமாம் என்றுரைக்கக் கேட்டதில்லை

தோலைவிற்கும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென்று சொல்லலுற்றாய் தூய்மை யில்லையா?

தென்னிலத்தை உழவில்லை

செந்தமிழ்விதைக்கவில்லை

இந்நிலையில் இந்திஓதி நாட்டிடவும் எண்ணுகின்ற

புன்மையுறு காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்

காத்ததென்று புகன்றனை வெட்கமில்லையா?

செந்தமிழ்க்கு நின்ற உயிர்

இந்திவந்தால் நின்றுவிடும்

-பாவேந்தர் பாரதிதாசன்