தலைப்பு-காலம் அழைக்குதடா,காசி ஆனந்தன் ; thalaippu_kaalamazhaikkudhadaa_kasiananthan

காலம் அழைக்குதடா!

மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும்
தீனி சமைத்தவனே! – தமிழ்
போனதடா சிறை போனதடா! அட
பொங்கி எழுந்திடடா!

காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!
பூட்டு நொறுக்கிடுவாய்! – நிலை
நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி!
ஏற்று தமிழ்க் கொடியே!

முந்து தமிழ்மொழி நொந்து வதைபட
இந்தி வலம் வரவோ? – இது
நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு!
வந்து களம் புகுவாய்!

நாறு பிணக்களம் நூறு படித்தநம்
வீறு மிகுந்த குலம் – பெறும்
ஊறு துடைத்திடு மாறு புறப்படு!
ஏறு நிகர்த்தவனே!

நாலு திசைகளும் ஆள நடுங்கிய
கோழை எனக்கிடந்தாய்! – மலைத்
தோளும் குனிந்தது போலும்! விழித்தெழு!
காலம் அழைக்குதடா!

விடுதலைக் கவிஞர் காசி ஆனந்தன்