– தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ

–  திருப்புகழ் இசைப்பா

thamizh04

1. உலக முதல்மொழி! நமது தமிழ்மொழி!

உரிமை தரு மொழி! உயர்வு பெறு மொழி!

மலரும் அறிவெழில்! பொழியும் நறுமொழி – மலைபோல

2. மணிகள் ஒளிதிகழ் அரிய அறமொழி!

மகிழப் பலகலை உணர்வுதரு மொழி!

மருவும் உயிரெலாம் பயிலவரும் மொழி! – வளம்நாடும்

3. பலநல் லறிவுளோர் பரவும் பெருமொழி!

பயனுணரும் கலை அறிஞர் புகழ்மொழி!

பரிவோ டருள்புரி பழமை(த்) தமிழ்மொழி! – பயில்வோர்கள்

4. பழைய குறை – கறை – வறுமை, மடியெலாம்!

பகரும் மணிகொடி தனிலே பொடிசெயும்

பழகி இசையுடன் உலகில் உயர்வுறப் – பயன்கூட்டும்!

5. கலைகள் எனப்படும் கலைகள் அனைத்தினும்

கலைகள் குறித்திடும் பழைய பொருளினும்

கருத்தில், எழுத்தில் கலைகள் உணர்த்திடும் – கலைத் தந்தை!

6. கடமை புரிந்திரு மடமை யகன்றிட

கயமை ஒழிந்திட கலைகள் வளர்ந்திட

கடமை யுணர்த்திடும் அரிய திருக்குறள் – நெறியோங்க!

7. தலைமை தருந்தமிழ் மொழியில் சிறந்திடும்

தமிழ ருயர்ந்திட அறிவு புகன்றிடும்

தகைமை மிகுவகம் –  புறம் – சிலம்பொலி – தழைத்தோங்க

8. தகுதி – உரிமையும் தமிழர் மனைதொறும்

தவழத் தமிழ்மொழி உலகிலரண்பெறத்

தமிழரனைவரும் பணிகள் புரிகுவம், – தமிழ்ச்சான்றோர்

9. விலையில் மணிபொருள்! அரிதெனவும் புகழ்

மிகுமினிய தமிழ்க் கலைதொல் காப்பியம்

விளங்க உலகெலாம் தமிழை நாட்டுவோம் – தமிழ் வேந்தர்

10. விரிந்த உலகெலாம் பரிந்து தமிழ்தனை

விழைந்து புரந்தற அரசு புரிந்தனர்!

வியக்குமவ ரரும் செயல்கள் புரிந்துநாம் – வெல்வோமே!

Thirukural04