– கே இராமையா

1. பொங்கியெழுந் தென்கடலி னடுவே தோன்றிப்

பொதிகைமலைச் சாரலெல்லாம் புனலோ யோடிப்

பொங்கரிடைத் தென்றலெனப் பூவோ டாடிப்

புகழ்மறவர் தென்பாண்டிக் கூடல் சேர்ந்து

சங்கமமர்ந் தகமகிழப் புறமு மார்ப்பச்

சதிராடி வந்தவளே! தமிழே! தாயே!

மங்கரவுன் புகழ்வாழ வாழ்வா யுன்றன்

மக்களுளோம் மண்டமர்க்கு மயங்கா மள்ளர்

2. சீராருந் தாயேநின் சேயே னோர்நாள்

செத்தபிணம் படையெடுத்து வருதல் கண்டேன்

போராட லேன்? பிணங்கள் தானே விழும்

பூசலெதற் கென்றிருந்தே னானா லன்னாய்!

நேராத செயல்நேரக் கண்டேல் வேலி

நெற்பயிரை மேய்வதனைக் கண்டு விட்டேன்

தேராதான் றன்மகளைப் பெண்டா ளர்க்குத்

திட்டமிட்ட செயல்கண்டே னந்தோ நொந்தேன்

3. காப்பதற்குக் கடமைகொண்டார் கயமை கொண்டார்

கன்னல்தமி ழன்னாய்நின் வாழ்வைப் போக்க

காப்புறையு முழங்கிவிட்டார் நாசம் நாசம்

நாங்களினிப் பொறுப்பதிலை யுறங்கோ மொல்லை

மாப்பெரிய போர் தொடங்கும் தீயே மூளும்

மண்டழலை யென்னுடலி லேற்றி மானங்

காப்பதற்கு முன்செல்வேன் வாரீர் வாரீர்.

காளையரே சிங்கங்காள் என்றான் சென்றான்.

4. வந்தபகை முடித்திட்டு வாகை சூடி

வருபகையை யெதிர்நோக்குந் தமிழன் வீரம்

முந்தியுள கதையல்ல அதுதா னின்றும்

முடித்திடுவோம் பகையாவும் இல்லை யாகும்

குந்தியெழுங் குரங்குகளோ நாமெல்லோருங்

கொடுங்கூற்றப் புலியன்றோ கொதித் தெழுந்து

வந்திடுமின் பகைமுடிமின் வாகை கொண்மின்

வல்லுடலென் முன்பலியென் றீந்தாள் போந்தன்.

5. இராப்பகலா யென்றாயே யுன்னைப் போற்றி

யேற்றியுயர் புகழ்பாடிப் போந்த சாமி

திராவிடத்தின் மறவர்க்குலத் துயர்ந்த சாமி

தித்திக்கத் தமிழ்பரவிப் பாடுஞ் சாமி

அராவிடத்தினதிகமென ஆர்த்த சாமிchinnachamy01

அயல்மொழிக்கோர் அழிவுமணி யடித்த சாமி

சிராப்பள்ளி தந்திட்ட சின்னச்சாமி

செயலாலே யார்க்கு மவன் பெரிய சாமி.

 – குறள்நெறி  பங்குனி 02.1995 / 15.03.1964