தமிழியக்கக் கனல் மூட்டியவர்

 

நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல
நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை
ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே
ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்!
பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப்
பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று
போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப்
புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்!

மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும்
மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன் றில்லை!
சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம்
தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை!
மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ?
மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும்
செங்கரும்பும் நறும்பாலும் தேனும் பாகும்
செந்தமிழ்க்கு நிகராமோ என்ற மேலோர்!

தமிழியக்கம் எனும்கனலைத் தமிழர் நெஞ்சில்
தழைத்தெரியச் செய்ததனால் தமிழர் இன்று
தமிழ்வாழ்வு காணுதற்கு முயலு கின்றோம்!
தம்மானம் காக்கின்ற உணர்வு பெற்றோம்!
தமிழியக்கம் எனும்தீயால் தமிழ்ப்பற்று றில்லாத்
தருக்கர்தம் செருக்கெல்லாம் பொசுங்கக் கண்டோம்!
தமிழியக்கம் கண்டதொரு தமிழின் நல்ல
தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க!

–  கவிக்கோ ஞானச்செல்வன்