ஓவியக்கலை

ஓவு என்னும் சொல்லுக்கு “அழகு பொருந்துமாறு செய்தல்” அல்லது “ஒன்றைப்போல எழுதுதல்” என்னும் பொருள். இதனடிப்படையில் ஓவி என்னும் சொல் ஓவியத்தைக் குறித்துள்ளது. பின்னர் அம் என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து ஓவம் என்பது ஓவியத்தைக் குறித்துள்ளது. ஓவு அர் ஓவர் என்பது ஓவியரைக் குறித்துள்ளது. ஓவி அம் ஓவியம் என்னும் சொல்லாட்சி பின்னர் நடைமுறையில் வந்துள்ளது. ஓவியத்தை வரைபவர் பின்னர் ஓவியன் அல்லது ஓவியர் எனப்பெற்றனர்.

நேர்கோடு, வட்டம், முக்கோணம் ஆகிய மூன்று மூலவடிவங்களினின்று தோன்றிய உருக்கள் எண்ணிறந்தன. எல்லா வகையான வண்ணங்களும் அமைந்த அழகிய படங்களை அச்சியற்றுவோர் பயன்படுத்தும் நிறங்கள் மஞ்சள், சிவப்பு, நீலம் என்னும் மூன்றுமேயாம்.

இவ்வாறு ஆராயுமிடத்து, கண்ணினாலும், செவியினாலும், உள்ளத்தினாலும் உணர்ந்து இன்புறற்பாலவாய், அழகுக்கலை உருக்களெல்லாம் ஒருசில மூலவுருக்கள் காரணமாகத் தோன்றி நின்றனவென்பது தெளிவாகின்றது.

உருக்களை ஆக்கிக் கொள்ளும் முறையினரைக் கூறும் நூல்கள் பொதுவியல்புகளை வகுத்துக் காட்டுவன. புலவன், இசையோன், கூத்தன், ஓவியன் என்று இன்னோர், தமது சொந்த ஆற்றலினாலே, நுண்ணிய விகற்பங்களைத் தோற்றவித்துச் செம்மை நலஞ் சான்ற உருக்களைப் பெருக்குதலினாலே அழகுக்கலைகள் விருத்தியடைகின்றன.

முத்தமிழ்ப் பேராசிரியர் விபுலானந்த அடிகள்:

யாழ்நூல்” பக்கம்: 361, 362