–  தமிழ்ப் புரவலர்  தூய தமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ

chinnasami03

அ)
நெஞ்சத் துணிவுடையாய்! – தமிழர்
நேர்மைத் திறமுடையாய்! – தமிழர்
கொஞ்சும் தமிழ்வளம் பெற – தீயிலே
 குளித்த தமிழ் மறவா!

ஆ)
‘‘அஞ்சி அடிமைகளாய் – வாழ்பவர்
அன்புமக்க ளாகார்!’’ என்றே
நெஞ்சுரம் காட்டி நின்றாய்! – சின்னப்பா!
நெருப்பிலே நின்றுவென்றாய்! (நெஞ்சத்)

இ)
வஞ்சகெஞ்ச வடவர்! – திருந்த
வாழ்வை நெருப்பில் இட்டாய்!
செஞ்சொல் தமிழ மகனே! – சின்னப்பா!
திருக்குறட் கோமகனே!  (நெஞ்சத்)

உ)
பஞ்செனத் தீயில் இட்டாய் ! – உடலைப்
பைந்தமிழ் காத்திடவே!
அஞ்சாத் தமிழ் அரிமா! – சின்னப்பா!
ஆண்மகன் நீயே! அப்பா (நெஞ்சத்)

ஊ)
மஞ்சள் இழக்க வைத்தாய்! – உன்துணை
வாழ்வில் நெருப்பை வைத்தாய்!
பிஞ்சுமகள் செல்வி! – தமிழ்த்தாய்ப்
பெருமை அடைய வைத்தாய்! (நெஞ்சுத்)

எ)
பகைவர் உள்ளம் திருந்த – தமிழர்
பண்பை உணர்த்தி விட்டாய்!
நகைக்கத் தகும் மொழியாம் – இந்தியை
நாடே வெறுக்க வைத்தாய்! (நெஞ்சத்)

ஏ)
தகைமை மிகும் வள்ளுவர் – தமிழ்ச்
சான்றோர் சொல் சான்றாண்மை!
மிகும் அறப்போர் புரிந்தாய்! & வாழ்விலே
மேன்மக னாகி நின்றாய்! (நெஞ்சத்)

ஐ)
மொழி – இன – நில உரிமை! – இல்லாத
மொட்டை மர வாழ்க்கை!
பழியுடைத் தென்று கண்டாய்! & தமிழர்
பல்குழுத் தீமைகண்டாய்! (நெஞ்சத்)

ஒ)
‘‘அழிவேன்! தமிழர் ஒன்றி – வாழ்ந்திட
ஆக்க உணர் வளிப்பேன்!
மொழியின் உயர்ந்த தமிழ்! – ஓங்கநான்
மூழ்குவேன்! தீயின்!’’ என்றாய்! (நெஞ்சத்)

ஓ)
தலை கொடுத்தான்! குமணன்! – தமிழ்த்தாய்
தனிசசிறப் பெய்திடவே!
தலைவைத் தெரிந்து கொண்டே! & நந்தியும்
தண்டமிழ்த் தேனை யுண்டான்! (நெஞ்சத்)

ஔ)
நிலையில்லா யாக்கையினால் – சின்னப்பா!
நிலையான ஆக்கம் தந்தாய்!
மலைமேல் விளக்கௌனவே! – தமிழ்த்தாய்
வாழ ஒளி யளித்தாய்! (நெஞ்சத்)

குறள்நெறி: பங்குனி 19, தி.பி.1995 / 01.04.1964: பக்கம் 12