சொல்லடா! சுரதா

கோங்கம் மலர் பூத்த-பசுங்

குன்றம் முழுநிலவை

வாங்கிப் புசிக்குதுபார்-குளிர்

வண்ணப் பனிச்சிரிப்பே !

தீங்கனிச் செந்தமிழ்தான்-எங்கள்

சிறப்பு விளக்கமென்றே

மாங்கனி வாய் திறந்து- நான்

மகிழ்ந்திடச் சொல்லாயோ!

 

“இச்சகத் தார்க்குநாங்கள்-எதிலும்

இளைத்தவ ரல்லகாண்!

அச்சம் இடித்துவிட்டோம்- நாங்கள்

ஆண்மை வரிப்புலிகள்:

உச்சி இமயத்திலே-புகழ்

ஒங்கும் மறக் குலத்தின்

மச்சக் கொடிபறக்கும்’-என்று

மாமல்லா நீ சொல்லடா!

 

‘வானை அளந்திடுவோம்-புது

வையம்  நிறுத்திடுவோம்!

தேனைநிகர் தமிழ்க்குத்-துளி

தீங்கு விளைப்போர் பெரும்

ஆனைகள் போல்வரினும்- நாங்கள்

ஆயிரம் சிங்கங்கள்தாம்”‘- எனச்

சேனை முரசொலித்து-இதைச்

செப்படா தோள் உயர்த்தி!

 

– உவமைக்கவிஞர் சுரதா

இதழ் பொன்னி, 1947 ஏப்பிரல்

தரவு :பாரதிதாசன் பரம்பரை