ltte logo01
உரோம்:

        இத்தாலியில் கடந்த 2008–  ஆம் ஆண்டு தமிழ்ச் தேசிய செயல் வீரர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி  திரட்டி வழங்கினர். இது பன்னாட்டுப் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது எனத் தமிழ்த் தேசிய செயல்வீரர்கள்  தளையிடப்பட்டனர்.

அவர்கள் மீது கடந்த 2010–ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என கடந்த 2011–ஆம் ஆண்டில்  இத்தாலி  நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் மூலம் மருத்துவம், நீதிமன்றம், கல்வி, பொருளாதாரம், சீரான   படையமைப்பு முதலானவை  கொண்ட  அரசை நிறுவி இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனவே இந்த இயக்கம்  செனீவா  ஆவணங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியது. எனவே, இந்த இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாகப் பார்க்க முடியாது. அந்த வகையில் (இத்தாலி) தமிழ்த் தேசிய செயல் வீரர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம்  பொருளற்றது.

   மேலும், விடுதலைப்புலிகள் இயக்கம் போர்க்குற்றம் புரிந்திருப்பின் அவற்றிற்கான  உசாவலைப் பன்னாட்டு மனித உரிமை மீறல்களுக்கான நீதிமன்றமே மேற்கொள்ளத் தகுதியானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து இத்தாலி அரசு மேல்  நீதிமன்றத்தில் முறையிட்டது. அதற்கான வழக்கு கடந்த 27.02.14 அன்று கேட்பிற்கு வந்தது.

9 நீதிபதிகள் முன்னிலையில் அந்த  வழக்கு நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை  செனீவா ஆவணங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்க வேண்டும். இதைப் பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. எனவே, கீழ் நீதிமன்றத் தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என  விடுதலை செய்வதாகவும் தீர்ப்பளித்தனர்.