72watertheft

சங்கரமூர்த்திபட்டிப் பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு

  தேவதானப்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது.

  முதலக்கம்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி, குள்ளப்புரம், வைகைப்புதூர் பகுதிகளில் வைகை ஆற்றில் இருந்து ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மின்பொறிகள் மூலம் தண்ணீரைத் திருடுகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் உடந்தையுடன் ஆற்றின் அருகே மின்இணைப்பு பெற்றுத் தண்ணீரை மின்பொறி மூலம் எடுக்கின்றனர். இவ்வாறாக எடுக்கப்படும் தண்ணீரை நீரூர்திகள், உழுவைகளில் நிரப்பி உணவகங்கள், வீடுகள். விடுதிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

  அரசு உழவர்களுக்கு விலையின்றி மின்சாரம் தருகிறது. இவ்வாறு தருகின்ற மின்சாரத்தை முறையாக வேளாண்மைக்குப் பயன்படுத்தாமல் வணிக நோக்கில் விற்பனை செய்கின்றனர். எனவே மின்வாரிய ஊழியர்களும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்குப் புறம்பாகத் தண்ணீரை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் பொதுமக்கள்.

72vaikaianeesu