53jaggery_vellam02

தேனி மாவட்டத்தில் வெல்ல உற்பத்தித் தொழில் நலிவடைந்துள்ளது.

  தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், மஞ்சளாறு அணைப்பகுதிகளில் கரும்புகளில் இருந்து வெல்ல உற்பத்தித் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. உழவர்கள் தங்கள் தோட்டத்தில் வெல்லம் உருவாக்கத்தேவையான குடிசைகள், கலன்கள், அடுப்புகள் போன்றவற்றை அமைத்து அதற்கு ஆட்களையும் வைத்திருப்பார்கள். கரும்பு முற்றியவுடன் கரும்புகளை ஆட்டிக் கொதிகலன்களில் சூடாக்கி வெல்லம் உற்பத்தி செய்வார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் வெல்லம் தமிழகம் முழுமைக்கும் பிறமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் வாழ்ந்திருந்தனர்.

53vellamindustry

  கடந்த சில வருடங்களாகப் போதிய மழை பொழியாததால் கரும்பு பயிரிட்ட தோட்டங்கள் அனைத்தும் தரிசுநிலங்களாக மாறின. அதன் பின்னர் வெல்லம்   செய்யத்தேவையான கலன்கள், அடுப்புகள், கூடாரங்கள் ஆகியவை பயனற்றுப்போயின. தற்பொழுது மழை பொழிந்து உள்ளதால் உழவர்கள் நெல், மக்காச்சோளம் போன்ற குறுகிய காலப்பயிர்களைப் பயிரிட்டு வருகின்றனர். கரும்புப் பயிரிடலுக்குப் போதிய அளவு தண்ணீர் இன்மை, கூலிஆட்கள் பற்றாக்குறை, உரம் விலை உயர்வு போன்ற காரணங்களால் வெல்ல உற்பத்திக்கு உழவர்கள் முன்வரவில்லை.

  எனவே மாவட்ட நிருவாகம் வெல்லத் தொழிலுக்குப் புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் உழவர்கள்.

 53vaikaianeesu