48minkambi_electricwire

தேவதானப்பட்டி பகுதியில் மின்கம்பங்களால் மின்கேடு(விபத்து) ஏற்படும் தீக்கேடு உள்ளது. தேவதானப்பட்டி பகுதியில் அண்மைக்காலமாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது.

மின்கம்பங்களில் கம்பிவடத்தொலைக்காட்சியின் கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. இணைப்புவடக் கம்பிகள் முறையாக இணைப்பில்லாமல் ஆங்காங்கே விரிவு ஏற்பட்டு அதன் மேல் காப்புநாடா ஒட்டப்படாமல் உள்ளது. இதனால் மழை நேரங்களில் கம்பிகள் செல்லும் வீடுகளின் மீதுள்ள இரும்புக் கதவு, தகரம் ஆகியவற்றில் மின்சாரம் பாய்கிறது.

இவை தவிர மின்கம்பங்களில் ஆங்காங்கே செடிகள் பின்னிக்கிடக்கின்றன. இதனால் செடி, கொடிகளை உண்ணச்செல்லும் கால்நடைகள் அதன்மூலம் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காட்டுச்சாலை பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன.

இவை தவிர தேவதானப்பட்டி பகுதியில் உள்ள கோட்டார்பட்டி, கெங்குவார்பட்டி பகுதியில் மின்சார ஊழியர்கள் இல்லாமல் தனியார்கள் மின்சாரத்தைத் துண்டிக்கவும், மின்சாரத்தைச் செயல்படுத்தவும் செய்கின்றனர். இதனால் காட்டுச்சாலைப் பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் இறந்துள்ளனர்.

எனவே மழைக் காலத்தில் முன்எச்சரிக்கையாக மின்சார வாரியம் செயல்பட்டு மின்கேட்டைத் தடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

vaigaianeesu_name02