vaiko07

இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிக்கும்

முயற்சியை உடனடியாகக்

கைவிட வேண்டும்

“தமிழ்நாட்டில் 47 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் இருமொழி திட்டத்தை மாற்றி மும்மொழி திட்டத்தை செயற்படுத்த செயலலிதா அரசு முயல்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பள்ளிகளில் மீண்டும் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டால் மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்” என வைகோ கூறியுள்ளார்.

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

  தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி- பயிற்சி நிறுவனம் சார்பில் கலந்தாலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும், மதுரையில் சூலை 20, கோவையில் சூலை 22, சென்னையில் சூலை 24 ஆகிய நாள்களில் நடைபெறும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டங்களில் கருப்பொருளாக 13 தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் 11 ஆவது தலைப்பில், மொழியை வளர்த்தல் என்று குறிப்பிட்டு அதில் மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வருவது தொடர்பாகப் பல்வேறு குழுக்களுக்கிடையே கலந்துரையாடலுக்கு 9 வகையான கேள்விகள் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழ் மட்டுமின்றி சமக்கிருத மொழியை வளர்ப்பதற்கான கேள்விகளும் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்திய பின்னர், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மும்மொழிக் கல்வித் திட்டத்தை செயற்படுத்தத் திட்டமிடப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

  இந்தியைக் கட்டாயப் பாடமாகத் திணித்ததால் இராசாசி ஆட்சிக்கு எதிராகத் தமிழகம் 1937 இல் போர்க்கோலம் பூண்டது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இந்திதான் இந்நாட்டின் ஆட்சி மொழி என்று அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்ததைச் செயற்படுத்த மத்திய அரசு முயன்றபோது 1965 இல் வரலாறு காணாத மொழிப்புரட்சி தமிழகத்தில் வெடித்தது. கீழப்பழுñர் சின்னச்சாமி முதலான தமிழ் இளைஞர்கள் தீக்குளித்து உயிர் ஈகம் செய்தனர். தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக இளைஞர்களாலும், பள்ளி, கல்லூரி மாணவர்களாலும் எழுச்சிகரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

  1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் இனித் தமிழ்நாட்டில் இருமொழித் திட்டம்தான் இருக்கும் என்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். தமிழ்நாட்டில் 47 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் இருமொழித் திட்டத்தை மாற்றி மும்மொழி திட்டத்தைச் செயற்படுத்த முயல்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தமிழகத்தில் விரும்புகிறவர்கள் இந்தி மொழியைப் படிப்பதற்கும் தற்போது எந்தத் தடையும் இல்லை. ஆனால் பள்ளிகளில் மீண்டும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டால் மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியத் துணைக் கண்டத்தில், ஒரு சிறு பகுதி மக்களின் மொழியான இந்தியை, பிற தேசிய இனங்கள் மீது கட்டாயமாகத் திணிக்கும் முயற்சிகளை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தியாவின் ஆட்சிமொழியாக அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்று கோரிக்கை பல ஆண்டுகளாக வலுத்து வருகின்றது. இந்நிலையில் செயலலிதா அரசு, தமிழ்நாட்டில் இந்திக்கு மகுடம் சூட்ட முயற்சியில் இறங்கி இருப்பதை ஏற்க முடியாது. இந்துத்துவா சக்திகளின் திட்டத்தைச் செயற்படுத்த சமக்கிருத மொழியைப் பள்ளிகளில் நுழைக்கும் திட்டமும் கண்டிக்கத்தக்கதாகும். எனவே தமிழக அரசு, தற்போதுள்ள இருமொழிக் கல்வித் திட்டத்தை மாற்றி, இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு,  வைகோ  கல்வித்துறை மூலம்  இந்தி, சமக்கிருதம் திணிக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பிறமொழித்திணிப்பைத் தடுக்குமா? காரணமானவர்களைத் தண்டிக்குமா?

sanskrit-and-hindi-vendaa01