– அறிவியல் ஆவணப்படம் திரையிடலில் பேச்சு –

               வந்தவாசி. ஆடி 20, 2045 / ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து   உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்சுட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டி விழா நடத்தினர். விழாவில் அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பெற்றது. நிகழ்வில், மனித சமூக வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் புறம்பான மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் பெறுகிற விடுதலையே உண்மையான அறிவியலாகும் என்று யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர் மு.முருஷசு பேசும்போது குறிப்பிட்டார்.

     இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் பி.என்.அன்பழகன் தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர்கள் தெ.இராசேசுவரி, இரா.அப்பாண்டைராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியர் இரா.அருண்குமார் அனைவரையும் வரவேற்றார்.

           ‘பூமி, சூரியன், சந்திரன்’ பற்றிய அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பட்டது. ‘உலகம் உருவான கதை’ எனும் அறிவியல் நூலை வெளியிட்டு, ‘அறிவியலும் நாமும்’ எனும் தலைப்பில் யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர் மு.முருகேசு பேசும்போது, “காலம் எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சியில் முன்னேறினாலும், வளர்ந்த நாடுகள் போராயுதங்களை-அணுகுண்டுகளை வைத்துக் கொண்டு, சிறிய வளரும் நாடுகளை மிரட்டுகிற போக்கு இன்னும் மாறவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்கிற அறிவியல் முறையிலான தெளிவைப் பெற மாணவர்கள் எப்போதும் தயங்கக் கூடாது. சிறு அகவையில் நமக்குள் எழும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடமும் கற்றறிந்த சான்றோர்களிடமும் கேட்டு, அவற்றிற்கான விளக்கங்களைப் பெற முயல வேண்டும்.

   எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே தலையாட்டி ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை மாற வேண்டும். நமது அன்றாட வாழ்வில் நிகழ்கிற ஒவ்வொரு செயலுக்குமான அறிவியல் காரணத்தைச் சரியாய் நாம் புரிந்து கொண்டாலே, பல சிக்கல்களுக்கு விடை கிடைத்துவிடும். அறிவியலின் பயனைப் பயன்படுத்துவதோடு நின்றுவிடாமல், நாமும் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிகிற அறிவியலாளர்களாக மாறிட வேண்டும். அரசுப் பள்ளியில் படித்தாலும் அறிவியல்துறையில் சாதனைப் படைக்க முடியும் என்பதற்கான முன்னெடுத்துக்காட்டாக விண்வெளி அறிஞர் மயில்சாமி அண்ணாத்துரை இன்றைக்கு நம் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கிற மனிதராக உயர்ந்து நிற்கிறார்” என்றார்.

பின்னர் நடைபெற்ற அறிவியல் வினாடி-வினாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வந்தவாசிச் சுழற் சங்கச் செயலர் அல்லாபகசு பரிசுகளை வழங்கினார்.

நிறைவாக, மா.குமரன் நன்றி கூறினார்.

தரவு : முருகேசு <haiku.mumu@gmail.com>