திருக்குறள் திலீபனின் நூறாவது கவனகக் கலை நிகழ்வு
கவனகக் கலையைத் தானும் கற்றுப் பிறருக்கும் கற்பித்து வரும் தமிழ்ஆர்வ இளைஞர் திருக்குறள் திலீபன். இவரது நூறாவது நிகழ்வு காரைக்குடியில் 08.12.13 ஞாயிறு காலை நடத்தப் பெற்றது.
தமிழக மக்களின் பழங்கலைகளில், கவனகக் கலை நுண்ணாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த கலையாகும். ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை, நினைவில் நிறுத்தித் தொகுத்து வழங்கல் நினைவாற்றலின் உயர்ந்த நிலையாகும். நினைவாற்றலுடன் படைப்பாற்றலும் இணைந்ததே கவனகக்கலை.
திலீபன் காரைக்குடியைச் சேர்ந்த, தங்கசாமி – சுமதி இணையரின் மகனாவார்; சென்னை இலயோலா கல்லூரியில் படிக்கிறார்; தன் 8 ஆம் அகவையில் திருக்குறள் மூலம் கவனகக் கலையைக் கற்கத் தொடங்கினார்; தன் 18 ஆம் அகவையில் இப்பொழுது நூறாவது கவனகக் கலையை நிகழ்த்தி அருந்திறல் புரிந்துள்ளார்.
இவரிடம், திருக்குறளில் முதல் சீரைச் சொன்னால், அதற்குரிய குறளைச் சொல்லுவார். அதுபோல் திருக்குறள் எண்ணைச் சொன்னாலும்,உரிய குறளைச் சொல்லுவார். ஒன்று முதல் 50 பெயர்களை வரிசையாக மாற்றி சொன்னால், அதை மனதில் வைத்து, ஒன்று முதல் 50 வரை எண்கள், அதற்கான பெயர்களையும் சொல்லுவார். கி.பி.1 முதல் 1,00,000 ஆண்டுகள் வரை, நாளைக் குறிப்பிட்டால், கிழமையைச் சொல்லுவார். இவை போல்,உலக நாடுகள் பெயரைச் சொன்னால்,அதன் தலைவர்களைச் சொல்லுவார்.
100-ஆவது கவனகக் கலை நிகழ்ச்சியல் இவ்வாறு, குறள், பறவை, எண், விலங்கு, எழுத்து, நூல், கூட்டல், மலர், பெயர், பழம், ஆண்டு, நாடு, மாயக்கட்டம், வண்ணம், தொடுதல், ஒலி ஆகிய 16 வகை கவனகக் கலைகளை நிகழ்த்தினார்.
தம் பிள்ளைகளுக்கு நினைவாற்றலும் அறிவாற்றலும் வளர வேண்டும் என விரும்பும் பள்ளியினரும் பெற்றோரும் திருக்குறள் திலீபனை அழைத்துப் பயிற்சி அளிக்கச் செய்யலாம்.
விழா நடத்துவோரே! திரைப்பட மாயையில் இருந்து சற்று விலகித் திருக்குறள் கவனகக்கலை பக்கம் வாருங்களேன்!
தொடர்புக்கு:
திருக்குறள் த. திலீபன்
அலைபேசி: 0091 75022 72075, 0091 94865 62716
மின்னஞ்சல்: thirukkuraldhileeban@gmail.com
வலைப்பதிவு: www.thirukkuraldhileeban.in
Leave a Reply