தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவி சக்தி வரவேற்றார்.

பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 கண் தானம் ஏ.சி. அறக்கட்டளை பொறுப்பாளர் அருணாச்சலம் கண்தானம் குறித்துப் பேசுகையில்,

“இந்தியக் கண் வங்கிகளின் கூட்டமைப்பின் அறிக்கைக்கிணங்க நமது நாட்டில்   நூறாயிரக்கணக்கானவர்கள் கருவிழி குறைபாட்டால் பார்வையற்றவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் அகவையினர். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில்தான் கண்தானம் பெறப்படுகிறது. நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், கண் புரை அறுவைப் பண்டுவம் செய்து கொண்டவர்களும் கண்ணாடி அணிந்து கொண்டவர்களும் கூடக் கண்தானம் அளிக்கலாம். ஆனால்  ஏய்ப்பு(எய்ட்சு),  வெறிநாய்க்கடி, புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களது கண்கள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளப்படும்.

  இறந்த 6 மணி நேரத்திற்குள் கண்கள் கொடுக்கப்பட வேண்டும். கண் தானம் கொடுக்கும்போது   உரியவர் இறந்த உடன் கண்கள் உலர்ந்துவிடாமல் இருக்க மின் விசிறியை அணைத்துவிட வேண்டும், அனால் குளிர்கலன் இருந்தால் அஃது இயங்கலாம். ஒரு சிறிய தலையணையைப் பயன்படுத்தித் தலையைச் சிறிது உயர்த்தி வைக்க வேண்டும். கண் இமைகள் ஒழுங்காக மூடப்பட்டிருக்க வேண்டும். இமைகளை ஈரத்துணியையோ, ஈரப்பஞ்சினையோ கொண்டு மூடி வைக்க வேண்டும். ஒரு பொது மருத்துவரிடம்  இறப்புச் சான்றிதழ் பெற்று ஆயத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடனடியாக அருகிலுள்ள கண் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு நமது முகவரியைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் 20 நிமிட நேரத்தில் கண்களை எடுத்துச் செல்வார்கள். நீங்கள் அனைவரும் உங்கள் அப்பா, அம்மாவிடம், பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறிக் கண்தானம் செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்”

என்று பேசினார்.

  மாணவர்கள் பரமேசுவரி, காயத்திரி, பரத்து, செந்தில், சீவா ஆகியோர்  ஐயங்கள் கேட்டுத் தெளிவடைந்தனர்.

நிறைவாக மாணவர்  இரஞ்சித்து நன்றி கூறினார்.

 

 jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/