(தமிழ்நாடும் மொழியும் 4 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும்

புதிய கற்காலம் தொடர்ச்சி

பழைய கற்கால மனிதன் நாடோடியாக அலைந்தான். ஆனால் காலப்போக்கில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்க்கக் கற்றுக் கொண்டான். மேலும் கூட்டம் கூட்டமாகவும் வாழ்ந்தான். நிலத்தைப் பயன்படுத்தவும் கற்றுக் கொண்டான். எனவே ஓரளவு நிலைத்த வாழ்க்கையே புதிய கற்காலத்துக்கு அடிப்படையாகும்.

பழைய கற்கால மனிதன் குகைகளில் வாழ்ந்தான். புதிய கற்கால மனிதனோ புல்லும் ஓலையும் கொண்டு வேய்ந்த குடிசைகளிலே வாழ்ந்தான். நாற்புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை வேய்ந்து பானையைக் கவிழ்த்த குடிசைகள் இன்றும் நாட்டுப் புறங்களிலே காணப்படுகின்றன. மழை விழுந்தால் ஒழுகாமல் இருக்கக் கவிழ்த்த இப்பானையே பிற்காலக் கோவிற் கோபுரங்களின் கலசங்களாக மாறின. கொஞ்சம் செல்வம் படைத்தவர்கள் மரங்களால் தங்கள் வீடுகளை அமைத்து வாழ்ந்தனர். திருச்சி, நெல்லை, புதுக்கோட்டை, சேலம், அனந்தப்பூர், கடப்பை, கருநூல் ஆகிய மாவட்டங்களிலே பழைய கற்கால மனிதன் பயன்படுத்திய மட்பாண்டங்களின் ஓடுகள் காணப்படுகின்றன. புதிய கற்கால மக்களால் செய்யப்பட்ட பானை, தாழி, சட்டி, பொம்மை, கிண்ணம், விளக்கு முதலியன மேற்குறித்த இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன. இப்பாண்டங்களிலே தீட்டப்பட்ட பலவகை வண்ணங்கள் இன்றும் அழியாமல் காட்சி தருகின்றன.

புதிய கற்காலக் கருவிகளிலே நூல் நூற்கும் கருவிகளும் கிடைத்துள்ளன. அவற்றோடு ஆடைகளை மென்மையாக்கும் கருவிகளும் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. முல்லை நிலத்தார் கம்பளி ஆடைகளையும் நெய்தது போலத் தெரிகிறது. தோற்பதனிடு கருவிகளும் கிடைத்துள்ளன. இவற்றிற்கு மேலாக நாணயக் கற்கள் கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து புதிய கற்காலத்தில் ஆடை நெய்தல், கம்பளி நெய்தல், தோற் பதனிடுதல், நாணய மாற்று ஆகியவை வழக்கில் இருந்தன என அறியலாம்.

இவ்வித நாகரிக முன்னேற்றம் அடைந்த புதிய கற்கால மனிதன் முதலில் கற்கருவிகளை நன்முறையில் பதப்படுத்தினான்; வேட்டையாடுவதற்கு நாய்களை வளர்க்கத் தொடங்கினான்; உழவினை உயர்ந்த தொழிலெனக் கொண்டான். பழைய கற்கால மனிதன் உடுத்திய தோலாடை, மரவுரி, இலையாடை ஆகியனவற்றைச் சில குறிப்பிட்ட சமயங்களிலேயே புதிய கற்கால மனிதன் பயன்படுத்தினான். பாண்டங்களைப் போல ஆடைகளையும் பல வகை வண்ணங்களைக் கொண்டு நிறம் பெறச் செய்தான். சங்காலும் எலும்பாலும் ஆய பித்தான்கள், வளையல்கள் அக்காலப் பெண்டிர் தம் அணிகலன்களாம். புதிய கற்காலப் பொம்மைகள் சில சேலம் மாவட்டத்திலே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பொம்மைகள் மூலம் அக்காலப் பெண்டிர் தம் கலையுணர்வை நன்கு அறியலாம்.

பழைய கற்காலத்தில் ஒருவனே எல்லாத் தொழில்களையும் செய்தான். புதிய கற்காலத்திலோ ஒவ்வொரு மனிதனும் தனித் தனியாக வெவ்வேறு தொழிலைச் செய்யத் தொடங்கினான். மனிதன் தனிநிலையிலிருந்து குடும்பமாக மாறும்பொழுதும் இவ்வாறே ஒவ்வொரு குடும்பமும் தனித்தனித் தொழிலைச் செய்ய முற்பட்டது. இவ்வாறு தொழில்பற்றிப் பிரிவுகள் பல மக்கள் சமுதாயத்திலே ஏற்பட்டன. பின்வந்த மற்றவர் அப்பல்வேறு பிரிவுகட்கும் இடையே பற்பல வேற்றுமைகளைக் கற்பித்து அவற்றை ஒன்று சேராதவாறு நூல்கள் செய்தும், கருத்துகளைப் பரப்பியும் பார்த்துக்கொண்டனர்.

பழைய கற்கால மக்களை விடப் புதிய கற்கால மக்கள் கொஞ்சம் அதிகமாகக் கலையுணர்ச்சியுடையவராய் இருந்தனர். புதிய கற்கால மனிதன் தன் எதிரே உள்ள ஆற்றைக் கண்டான்; ஊற்றைக் கண்டான்; கடலைக் கண்டான்; பல வகை மண்களைக் கண்டான்; காட்டையும் மேட்டையும் கண்டான். அவன் உள்ளத்திலே பொங்கிய அழகுணர்ச்சிகளைக் கல்லிலும், பாண்டங்களிலும் பல்வகை மண்களாலும் இலைச்சாறாலும் வெளிப்படுத்தினான். பலவகையான மண்பாண்டங்கள் செய்தான். அவற்றிலே ஓவியங்களைப் பல வண்ணத்தால் தீட்டினான். மஞ்சள், சிவப்பு, பழுப்பு, நீலம் ஆகிய பலவகை வண்ணப் பொருட்களைத் தூளாக்கிப் பலவகைப் பாண்டங்களைச் செய்தான். இதே போலப் பலவகைக் கற்களைக் கொண்டு வந்து இடித்து மாவாக்கிக் குகைகளின் மேற்சுவர்களில் அழகொழுகும் ஓவியங்களைத் தீட்டினான். ஓவியந் தீட்டப்பட்ட வளைகளும், பாண்டங்களும் இன்ன பிற பொருட்களும் பல இடங்களில் கிடைத்துள்ளன. கோலம் போடல் இப்புதிய கற்காலத்தில் தோன்றிய வழக்கமாகும்.

பழைய கற்கால மனிதன் இறந்தவரை வீசி எறிந்தான். புதிய கற்கால மனிதனோ இறந்தவரை அமர்ந்த நிலையில் தாழியில் புதைத்தான். தாழியுள் மணல், அரிசி, இறந்தவர் பயன்படுத்திய பல்வகைக் கருவிகள் முதலியனவும் வைக்கப்பட்டன. இத்தகைய பொருட்களை நிறையப் போட்டவுடன் தாழி மண் மூடியால் மூடப்பட்டு, பிறகு ஒரு குழியில் வைக்கப்படும். அக்குழி அதன் பின்னர் ஒரு கற்பலகையால் மூடப்படும். இதோடு நின்றுவிடாது மறுபடியும் மணலிடப்பட்டு மற்றொரு முட்டை வடிவக் கற்பலகை அம்மணல் மீது வைக்கப்படும். அதன் பின்னர் அதனைச் சுற்றிக் கற்கள் ஒரு முழம் அளவிற்கு நடப்படும். இத்தகைய தாழிகள் உடைய இடங்கள் புதுக்கோட்டைப் பகுதியில் நிறைய உள. தாழியின் உயரம் 4 அடி; அகலமோ 3 1/2 அடி. மற்றும் கோவை, பெல்லாரி போன்ற மாவட்டங்களில் சுமைதாங்கி போன்ற உருவில் அமைந்த கல்லறைகள் பல உள.

இனி, புதிய கற்கால மனிதன் பேசிய மொழி யாது எனப் பார்ப்போம். புதிய கற்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்தவர் யார்? பழைய கற்கால மக்களின் பரம்பரையினரே புதிய கற்காலத்தில் வாழ்ந்தனர். இவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்து வந்தனர். இவர்கள் பேசிய மொழி திராவிட மொழியே.

புதிய கற்கால மக்களின் சமயம் சைவ சமயமாகும். புதிய கற்காலப் பொருட்கள் பலவற்றுள் சிவலிங்கமும் ஒன்றாகும். இலிங்க வழிபாடு என்பது திராவிடர்களுடையதே. வேத கால ஆரியர்கள் இலிங்க வழிபாட்டைக் குறிக்கவில்லை. ஆனால் திராவிடர்கள் இலிங்க வழிபாட்டைப் போற்றியுள்ளனர். எனவே புதிய கற்காலச் சமயம் சைவ சமயமாகும்.

புதிய கற்கால மக்கள் கூடி வாழத் தொடங்கியமையால் மக்கட் பெருக்கம் மிகுதியாயிற்று. இதன் காரணமாய் ஊர்களும் குடியிருப்புகளும் தோன்றலாயின. ஆங்காங்கே மக்கள் நிலைத்து வாழ ஆரம்பித்தனர். நிலத்தைப் பண்படுத்தி ஆற்று நீரைப் பாய்ச்சி வயல்களில் நெல் விளைவித்தனர். இந்நிலம் நன்செய் எனப்பட்டது. கபிலை ஏற்றம் முதலியவற்றால் நீர் பாய்ச்சப்பெற்ற நிலம் புன்செய் எனப்பட்டது. இந்நிலத்தில் பருத்தி பயிரிடப்பட்டது. அதனின்றும் உடை நெய்யப்பட்டது. இவ்வாறு நிலையான வாழ்க்கை வாழத் தொடங்கிய காரணத்தால் மக்கள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தனர். இதுவே நாளடைவில் அரச பதவியாயிற்று.

புதிய கற்காலம் போய் எத்தனையோ நூற்றாண்டுகளாய் விட்டன. ஆனால் அக்காலப் பழக்க வழக்கங்கள் இன்னும் நம்மை விட்டகலவில்லை. அக்கால மனிதன் போல் வில்லைக் கொண்டும் கல்லைக் கொண்டும் பறவைகளை அடிக்கிறோம். கனிகளைப் பறிக்கிறோம். இன்னும் ஆட்டுரல் போன்ற கற்கருவிகளைப் பயன்படுத்துகிறோம். தோசை சுடப் பயன்படுவது தோசைக் கல்லாகும். இன்று இஃது இரும்பாலானதாக இருந்தபோதிலும் அப்பெயர் பழங்காலத்தில் தோசை சுடக் கல்லே பயன்பட்டது என அறிவிக்கிறது. ஆக இன்னும் நாம் புதிய கற்காலப் பழக்க வழக்கங்களையும் பொருள்களையும் முழுதும் மறந்தும் விடவில்லை; துறந்தும் விடவில்லை.

இன்றைய ஆராய்ச்சி

இதுவரை கூறியவற்றால் வரலாறு என்பது பழைய கற்காலத்திலிருந்து தொடங்குகிறது என்பது இனிது விளங்கும். ஆனால் பேராசிரியர் தேர் (Dare) என்பவர் கற்காலத்துக்கு முன் எலும்புக் காலம் ஒன்று உண்டு என்பதைத் தமது ஆராய்ச்சியின் காரணமாய்க் கூறியுள்ளார் என சோகன்சுபர்க் (Johannesburg) செய்தி கூறுவதாக அண்மையில் ‘இந்தியன் எக்ச்பிரசு’ (Indian Express) நாளிதழ் வெளியிட்டதை நாம் அறிவோம். எனவே கற்காலத்திற்கு முன்னர் மனிதன் பல், எலும்பு, கொம்புகளைப் பயன்படுத்தி வாழ்ந்து வந்தான் எனவும், அக்காலத்தை எலும்புக் காலம் எனப் பெயரிட்டு அழைத்தல் சாலப்பொருந்தும் எனவும் நாம் அறிகின்றோம்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்