தை மகளே! தமிழியத்தால் தகர்ப்போம் பகையை! – எழில்.இளங்கோவன்

தை மகளே! தமிழியத்தால் தகர்ப்போம் பகையை!    கீழ்வானக் கடல்முதுகில் கிளம்பும் நெருப்புக் கோளத்தின் கதிர்விரியக் கிழக்கு திக்கும்! ஆழ்கடலின் முத்துகள் ஆடும் கொற்கை அரியணையில் தமிழ்வீற்று ஆளும் கூடல்! வாள்பறக்கும் படைகிளம்பும் வெண்ணி தொட்டு வான்முட்டும் இமயத்தை வாளால் தொட்டார்! தாள்தொட்டார் இல்லையெனத் தமிழர் கூட்டம் தோள்தொட்டார்; தைப்பாவாய் தோளே தொட்டார்!   ஆரியத்தால் வீழ்ந்தோம்நாம்! அன்று சொன்ன ஆதிவேதம் புராணக்கதை அங்கே வீழ்ந்தோம்! போரிட்டால் வென்றிருப்போம்; பூனூல் தொட்டுப் பேரமைச்சே! இராசகுரு! போற்றி என்று வேரற்ற மரம்போல வீழ்ந்தோம் அங்கும்! வகுத்துரைத்தான் நால்வருணம் வீழ்ந்தோம் அன்றும்! தாருற்ற தைப்பாவாய் தோல்வி யில்லை திராவிடத்தால் எழுகின்றோம் தோற்ப தில்லை!   திராவிடத்தால் எழுந்தோம்நாம் தேட்டை செய்யும் தறுக்கரைநாம் திராவிடத்தால் தள்ளி வைத்தோம்! “ஆரடாநீ சாதிசொல்ல? அற்ப மூடன் ஆரடாநீ பெண்ணினத்தை அடிமை யாக்க? ஆரடாநீ மனுவாதி? அவனின் நூலை அனலிட்டுக் கொளுத்துங்கள்; அறிவும் மானம் தேறப்பா” ஈரோட்டில் தெறித்தார் தந்தை தைமகளே தமிழியத்தால் தகர்ப்போம் பகையை!   தமிழியம்தான் ஆரியத்தைத் தோற்க டிக்கும் தமிழியமே ஆரியமாய்த் தோன்றா மட்டும்! தமிழகத்தில் மதவாதத் தலைமைக் காகத் தமிழரிடம் சாதிவெறி தலைவி ரிக்க இமைகொட்டா விதைக்கிறது இந்துக் கூட்டம்; எதிர்த்திடுவோம்! பெரியாரின் இடது சாரித் தமிழியம்தான் பெருநெருப்பு; தமிழர் மானம்! தைப்பெண்ணே! தமிழ்க்கண்ணே! தமிழால் வாழ்த்து!   வாமகளே தைப்பாவாய் வா!வா! உன்னை வாழ்த்துகின்ற தமிழரைநீ வந்து வாழ்த்து! மாமகளே! தமிழ்ப்பிறப்பே! மலர்கண் தேனே! மாவிலையும் செங்கரும்பும் மழலைக் கூத்தும் கோமகளின் வளையிசையில் குலுங்க; வாசல் கோலத்தில் புதுப்பானை; கொதிக்கும் பொங்கல்; வாமகளே தைப்பாவாய்! வந்து வாழ்த்து! வளம்பெருக நலம்சிறக்க வாழ்த்து பாவாய்!   எழில்.இளங்கோவன்

திராவிடத்தை வென்றிடுவோம்! தமிழியத்தை ஊன்றிடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  திராவிடத்தை வென்றிடுவோம் எனச் சொல்வது ஆரியக் குரலா என எண்ணத் தோன்றுகிறதா? ஆரிய மாயையில் இருந்து மட்டுமல்லாமல் திராவிட மாயையில் இருந்தும் விடுபட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். தமிழின் தொன்மையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அறிஞர் வேங்கடகிருட்டிணன், தமிழ் மொழி இயற்கையான மொழி என்பதால் நம் பூவுலகு போல வெளியுலகு இருப்பின் அங்கும் தமிழ் மொழியே இருக்க முடியும் என்று நாம் அழுத்தமாகக் கூறலாம். அறிவியல் இந்தக் கூற்றை வலியுறுத்தும் நாள் விரைவில் வரும்.(தமிழே முதன் மொழி. பக்.389) எனக்…