காலத்தை வென்று வாழ்வன நல்ல இலக்கியங்கள். அந்தச் சிறப்பிற்கு ஓர் இலக்கியம் தகுதிபெற வேண்டுமானால் அஃது உண்மையைப் பேச வேண்டும். வளரும் அறிவியல் அந்த உண்மையைப் பகுதிகளாக அறிந்து நமக்குத் தெளிவுபடுத்தும். அப்படி அறிவியலால் அடையாளம் காணப்படும் உண்மையின் பகுதிகள், ஏற்கெனவே உருவாக்கப் பட்டுள்ள இலக்கியங்களுள் பொதிந்துள்ளன என்பதை உணர்ந்து, அந்தவாழும் இலக்கியங்களை ஆய்ந்தும், போற்றியும், பின்பற்றியும் மனித இன நன்மை பெறுகின்றது. அப்படிப் பெருமைபெறு இலக்கியங்களில், திருக்குறள் முதன்மையானது.

நல்லறிஞர்கள் பலரால், திருக்குறள் – திருவள்ளுவம் – நயம், சுவை, பொருள், இலக்கப்கோப்பு உள்ளிட்ட – பலவித ஆய்வுகளுக்குத் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், இலக்கியத்தின் இலக்கும் “உண்மை” என்பதாலும், அவ்வுண்மை அறிவியல் பகுதிகளாக அவ்வப்போது வெளிக்கொணரப் பட்டுக் கொண்டிருப்பதாலும், வாழும் இலக்கியத்தையும் வளரும் அறிவியலையும் இணைந்து ஆராய்வதும், ஆராய்ந்து இணைப்பதும் தேவையாகின்றது.

அந்தத் தேவையை உணர்ந்து, கவிஞர்கோ கோவை, இளஞ்சேரனார் நூல்கள் படைக்க முனைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அவருடைய முனைப்பில் இப்போது உருபெற்றிருக்கும் ‘அறிவியல் திருவள்ளுவம்‘ என்கிற ஆய்வு நூலைப் படித்து மிக மகிழ்ந்தேன். அரசாண்மையிaல், வானவியல், மருத்துவம், உளப்பகுப் பாய்வியல், பொருளாதாரம், வேளாண்மையியல் உள்ளிட்ட பல்வேறுதுறைச் செயற்பாடுகளில் இன்றைய மனித இனம் கண்டறிந்துள்ளனவற்றைக் திருக்குறள் குறிப்புகளுடன் தக்கவாறு பொருத்தி ஆய்ந்திருப்பதைக் கண்டு வியக்கிறேன்.

தமிழர்தம் வளர்ச்சியின் தேவையறிந்து இந்நூலின் வாயிலாக, கவிஞர் இளஞ்சேரனார் திருக்குறளை ஒர் அறிவியல் நூலாக அடையாளம் காட்டியுள்ளார். இந்தப் புதிய பார்வையின் அடிப்படையில் அவருடைல் ஆய்வுப்பணியும், எழுத்துப்பணியும் தொடர பயில்பவர் உலகம் அவருக்கு ஊக்கமளிக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

சென்னை-600005

திசம்பர்-23, 1994

அன்பன்,

0000

திருவள்ளுவம் மாந்த வாழ்வு சிறப்புறத் தேவையான அனைத்து அறிவையும் தெளிவுபடுத்தும் ஒப்பற்ற நூல்.

அறிவியல் (விஞ்ஞான) கருத்துகளின் மூலக்கூறுகளைத் தெரியப்படுத்தும் அறிவியல் நூல்.

இந்த நூல் மூலம் ஆசிரியர், திருவள்ளுவம் அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளதை அக்குவேறு ஆணிவேறாகச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

இந்நூலாசிரியர் திருமிகு. கவிஞர்கோ. கோவை. இளஞ்சேரனார் தமிழுலகுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தவர். சிறந்த எழுத்தாளர்; பேச்சாளர்; தமிழ்ப்பற்றாளர்; திருவள்ளுவம் பரவ உழைப்பவர்.

பேரறிஞர் அண்ணா வழி நடப்பவர்; கலைஞரின் அன்புக்குரியவர். பகுத்தறிவு பாதை மாறாதவர்.

அன்னாரின் இந்த நூலை வெளியிடுவதில் நாங்கள் மெத்தவும் மகிழ்கின்றோம்.

தமிழுலகம் எமக்கு அரவணைப்பு நல்கி எம்மை ஊக்குவிக்க வேண்டுகிறோம்.

நூலாசிரியர் அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இராசாபுரம் 614806

தி.ன. 2025 கார்த்திகை 10
(1994)

(பதிப்புத்துறை)