திருக்குறள் அறுசொல் உரை: 116. பிரிவு ஆற்றாமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
3. காமத்துப் பால்
15.கற்பு இயல்
- பிரிவு ஆற்றாமை
தலைவனது பிரிவைத் தாங்காது.
தலைவி வருத்ததை வெளியிடல்
(01-10 தலைவி சொல்லியவை)
- செல்லாமை உண்டேல், எனக்(கு)உரை; மற்றுநின்
வல்வரவு, வாழ்வார்க்(கு) உரை.
பிரியாமை உண்டேல் சொல்லு;
பிரிவதை வாழ்வாரிடம் சொல்லு,
- இன்கண் உடைத்(து),அவர் பார்வல்; பிரி(வு)அஞ்சும்
புன்கண் உடைத்(து)ஆல், புணர்வு.
அவர்பார்வை, இனிது; நீள்கூடலோ,
பிரிவு அச்சம் தருகிறது.
- அரி(து)அரோ தேற்றம், அறி(வு)உடையார் கண்ணும்,
பிரி(வு)ஓர் இடத்(து)உண்மை யான்.
அறிந்தோரிடமும் பிரிவு உண்டு;
அவரைத் தெளிதலும் கடினமே.
- “அளித்(து),அஞ்சல்” என்(று)அவர் நீப்பின், தெளித்தசொல்
தேறியார்க்(கு) உண்டோ தவறு?
“அஞ்சாதே!” என்றவரே பிரிந்தால்,
நம்பியவரிடம் தவறு உண்டோ?
- ஓம்பின், அமைந்தார் பிரி(வு)ஓம்பல்; மற்(று)அவர்
நீங்கின், அரி(து)ஆல் புணர்வு.
பிரிவினைத், தடுக்க; பிரிந்தால்,
மறுபடியும் கூடுதல் கடினம்.
- பிரி(வு)உரைக்கும் வன்கண்ணர் ஆயின், அரி(து),அவர்
நல்குவர் என்னும் நசை.
பிரிவைச் சொல்லும் கொடியராயின்,
மறுபடியும் கூடுதல் கடிது.
- துறைவன் துறந்தமை தூற்றாகொல், முன்கை
இறைஇறவா நின்ற வளை?
கழலும் வளையல்களே, காதலர்
பிரிவை, ஊர்அறியக் காட்டும்.
- இன்னா(து), இனன்இல்ஊர் வாழ்தல்; அதனினும்
இன்னா(து), இனியார்ப் பிரிவு.
உறவுஇல்லா ஊரில் வாழ்வதினும்,
இனியர் பிரிவே, நனிதுயர்.
- தொடின்சுடின் அல்லது, காமநோய் போல,
விடின்சுடல் ஆற்றுமோ தீ?
தொட்டால் சுடும்தீ, தொடாவிட்டாலும்,
காதல்நோய் போலச் சுடுமோ?.
- அரி(து)ஆற்றி, அல்லல்நோய் நீக்கிப், பிரி(வு)ஆற்றிப்,
பின்இருந்து, வாழ்வார் பலர்.
பிரிவைத் தாங்கித், துயர்நீக்கிப்,
பின்னும், உயிர்வாழ்வார் பலர்.
பேரா.வெ.அரங்கராசன்
Leave a Reply