(அதிகாரம் 077. படை மாட்சி தொடர்ச்சி)

attai-kuralarusolurai

02. பொருள் பால்
10. படை இயல்    
அதிகாரம் 078. படைச் செருக்கு

படைவீரரின் வீரப்பண்பு, மான

உணர்வு, வெற்றிப் பெருமிதம்.    

  1. என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்,என்ஐ

   முன்நின்று, கல்நின்ற வர்.

 

       பகைவரே! என்தலைவன்முன் நில்லாதீர்,

       நின்றார் நடுகல்லாய் நிற்கிறார்.

 

  1. கான முயல்எய்த அம்பினில், யானை

   பிழைத்தவேல், ஏந்தல் இனிது.    

 

       முயல்குறி தப்பாத அம்பைவிட,

       யானை தப்பியவேல் சிறப்பு.

  1. பேர்ஆண்மை என்ப தறுகண்;ஒன்(று) உற்றக்கால்,

   ஊர்ஆண்மை மற்(று)அதன் செருக்கு.

 

       பெருவீரத்தினும், பகைவரின் வீழ்ச்சியில்

       உதவி, உச்ச வீரம்.

 

  1. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்,

   மெய்வேல் பறியா நகும்.

                      

       யானைமேல் வீசி, வேல்இழந்தான்,

       மார்புபாய்ந்த வேல்பறித்துச் சிரிப்பான்.   

 

  1. விழித்தகண், வேல்கொண்(டு) எறிய அழித்(து)இமைப்பின்,

   ஒட்(டு)அன்றோ வன்க ணவர்க்கு?

 

       பாய்ந்துவரும் கூர்வேல்முன் கண்களை

       இமைத்தாலும், வீரனுக்குப் பழிதான். 

 

  1. விழுப்புண் படாதநாள் எல்லாம், வழுக்கினுள்

   வைகும், தன் நாளை எடுத்து.

 

       வீரப்புண்கள் படாத நாள்கள்

       போர்வீரனுக்கு வீணான நாள்கள்.      

 

  1. சுழலும் இசைவேண்டி, வேண்டா உயிரார்

   கழல்யாப்புக், காரிகை நீர்த்து.

                

         வீரப்புகழ் வேண்டி, உயிரையும்

         வேண்டார்தம் வீரக்கழல் பேரழகு.

 

  1. உறின்உயிர் அஞ்சா மறவர், இறைவன்

   செறினும்,சீர் குன்றல் இலர்.

              

       போர்வரின் உயிர்அஞ்சா வீரர்,

       தலைவன் சீறினும், வீரம்குறையார்.      

 

  1. இழைத்த(து) இகவாமைச் சாவாரை, யாரே

   பிழைத்த(து) ஒறுக்கிற் பவர்?

 

       சூளுரை நிறைவேறும்முன், வீரமரணம்

       அடைந்தாரைப் பழிப்பார் யார்?

 

  1. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின், சாக்கா(டு),

   இரந்துகோள் தக்க(து) உடைத்து.

 

       காத்தவர் கண்ணீர்விட, வரும்வீரச்

       சாவையும், விரும்பி ஏற்றுக்கொள்.

பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 079. நட்பு)