திருக்குறள் அறுசொல் உரை – 104. உழவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
02. பொருள் பால்
13. குடி இயல்
அதிகாரம் 104. உழவு
உலகையே வாழ்விக்கும், உயிர்த்தொழில்
உழவின் உயர்வு, இன்றியமையாமை.
- சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகம், அதனால்,
உழந்தும் உழவே தலை.
உலகமே உழவின்பின்; துயர்தரினும்,
தலைத்தொழில் உழவையே செய்.
- உழுவார் உலகத்தார்க்(கு) ஆணி,அஃ(து) ஆற்றா(து)
எழுவாரை எல்லாம் பொறுத்து.
எல்லாரையும் தாங்கும் உழவர்;
உலகத்தேர்க்கு அச்சுஆணி ஆவர்.
- உழு(து)உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்(று)எல்லாம்
தொழு(து)உண்டு பின்செல் பவர்.
உழவரே வாழ்பவர்; மற்றவர்,
உழவரை வணங்கி வாழ்பவர்.
- பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்,
அல(கு)உடை நீழ லவர்.
நெல்லின் நிழல்கீழ் வாழ்உழவர்,
பல்நாடுகளைத் தம்நிழல்கீழ்க் காண்பர்.
- இரவார், இரப்பார்க்(கு)ஒன்(று) ஈவர், கரவாது,
கைசெய்(து),ஊண் மாலை யவர்.
உழுது உண்பார், பிச்சைஎடார்;
வருவார்க்கு ஒளிக்காது தருவார்.
- உழவினார் கைம்மடங்கின் இல்லை, “விழைவதூஉம்
விட்டேம்”என் பார்க்கும் நிலை.
உழவர் கைவிட்டால், “துறந்துவிட்டோம்”
என்பார்க்கும், வாழ்நிலை இல்லை.
- தொடிப்புழுதி கஃ(சு)ஆ உணக்கின், பிடித்(து)எருவும்
வேண்டாது சாலப் படும்.
பலப்புழுதி கால்பங்காக் காய்ந்தால்,
உரம்இல்லாமல் அந்நிலம் விளையும்.
- ஏரினும், நன்(று)ஆல் எருஇடுதல்; கட்டபின்,
நீரினும் நன்(று),அதன் காப்பு.
உழவு, உரம், களைஎடுப்பு, நீர்பாய்ச்சல்,
காத்தல், மிகவும் தேவை.
- செல்லான் கிழவன் இருப்பின், நிலம்புலந்(து),
இல்லாளின் ஊடி விடும்.
கவனிக்காத நிலமும், கவனிக்காத
மனைவிபோல் வாடும்; ஊடும்.
- “இலம்”என்(று), அசைஇ இருப்பாரைக் காணின்,
நிலம்என்னும் நல்லாள் நகும்.
“ஏழையேன்” என்னும், சோம்பேறியைப்
பார்த்து நிலமகள் சிரிப்பாள்.
–பேரா.வெ.அரங்கராசன்
Leave a Reply