(திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை தொடர்ச்சி)

attai_kuralarusolurai
திருக்குறள் அறுசொல் உரை

02. பொருள் பால்
13. குடி இயல்
அதிகாரம் 104. உழவு 

உலகையே வாழ்விக்கும், உயிர்த்தொழில்

உழவின் உயர்வு, இன்றியமையாமை.    

  1. சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகம், அதனால்,

      உழந்தும் உழவே தலை.     

உலகமே உழவின்பின்; துயர்தரினும்,

தலைத்தொழில் உழவையே செய்.

 

  1. உழுவார் உலகத்தார்க்(கு) ஆணி,அஃ(து) ஆற்றா(து)

      எழுவாரை எல்லாம் பொறுத்து.

எல்லாரையும் தாங்கும் உழவர்;

உலகத்தேர்க்கு அச்சுஆணி ஆவர்.

 

  1. உழு(து)உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்(று)எல்லாம்

      தொழு(து)உண்டு பின்செல் பவர்.

உழவரே வாழ்பவர்; மற்றவர்,

உழவரை வணங்கி வாழ்பவர்.

 

  1. பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்,

      அல(கு)உடை நீழ லவர்.

நெல்லின் நிழல்கீழ் வாழ்உழவர்,

பல்நாடுகளைத் தம்நிழல்கீழ்க் காண்பர்.

 

  1. இரவார், இரப்பார்க்(கு)ஒன்(று) ஈவர், கரவாது,

      கைசெய்(து),ஊண் மாலை யவர்.

உழுது உண்பார், பிச்சைஎடார்;

வருவார்க்கு ஒளிக்காது தருவார்.


  1. உழவினார் கைம்மடங்கின் இல்லை, “விழைவதூஉம்

      விட்டேம்”என் பார்க்கும் நிலை.

உழவர் கைவிட்டால், “துறந்துவிட்டோம்”

என்பார்க்கும், வாழ்நிலை இல்லை.

 

  1. தொடிப்புழுதி கஃ(சு)ஆ உணக்கின், பிடித்(து)எருவும்

      வேண்டாது சாலப் படும்.

பலப்புழுதி கால்பங்காக் காய்ந்தால்,

உரம்இல்லாமல் அந்நிலம் விளையும்.

 

  1. ஏரினும், நன்(று)ஆல் எருஇடுதல்; கட்டபின்,

      நீரினும் நன்(று),அதன் காப்பு.

உழவு, உரம், களைஎடுப்பு, நீர்பாய்ச்சல்,

காத்தல், மிகவும் தேவை.

 

  1. செல்லான் கிழவன் இருப்பின், நிலம்புலந்(து),

      இல்லாளின் ஊடி விடும்.

கவனிக்காத நிலமும், கவனிக்காத

மனைவிபோல் வாடும்; ஊடும்.

 

  1. “இலம்”என்(று), அசைஇ இருப்பாரைக் காணின்,

      நிலம்என்னும் நல்லாள் நகும்.

“ஏழையேன்” என்னும், சோம்பேறியைப்

பார்த்து நிலமகள் சிரிப்பாள்.

   –பேரா.வெ.அரங்கராசன்