காலத்தின் குறள்

அதிகாரம் 1.நூன்முகம்

 

1.அறிவுறச் செய்தார் பெரியார் அவரைச்

செறிவுற ஏற்கும் உலகு.

2.அறிவாசான் சொல்லை அழகுக் குறளில்

அறிவிக்கா விட்டால் தவறு.

3.வள்ளுவன் வாய்ச்சொல்லை எண்ணித் துணிந்தேன்நான்

தெள்ளுதமிழ் செப்பும் குறள்.

4.உள்ளத்தில் உள்ளார் பெரியார் அவரை

உலகுக்(கு) உரைக்கும் குறள்.

5.உள்ளவரை நல்லமுறை தந்தவரைக் கூறத்தான்

வள்ளுவரைப் பின்தொடர்ந் தேன்.

6.குறள்வெண்பா கற்றேன் பெரியார் முழக்கக்

குரலென்பா கூறிநிற் கும்.

7.முடியாது எனவொரு சொல்லை நினையேல்

முடியும் பெரியாரைப் பற்று.

8.பெரியார் நெறியைக் குறள்வழிக் கூற

அரிதாய் இருக்குமிந் நூல்.

9.குறள்கொண்டு கொள்கையைக் கூற முயல்வார்

விரல்கொண்டே எண்ணிவிட லாம்.

10.உள்ளத்தில் உள்ளதை உள்ளபடிக் கூறிட

வள்ளுவப்பா தேர்ந்தெடுத் தேன்.

 

– ச.ச.வேலரசு (எ) தமிழரசன்