68waterscarcity

 தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் கோடைக் காலத்திற்கு முன்பே குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.

  குள்ளப்புரம் ஊராட்சிக்குற்பட்ட மருகால்பட்டி, புதூர், கோயில்புரம், சங்கரமூர்த்திபட்டி முதலான சிற்றூர்களில் இருபது நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பாத்திரங்களில் குடிநீரைப் பிடித்து வைக்கின்றனர். நீண்ட நாள் தண்ணீரைப் பாத்திரங்களில் வைத்திருப்பதால் புழுக்களும், நோய் பரப்பும் கொசுக்களும் உற்பத்தி ஆகின்றன. மேலும் இத்தண்ணீரை அருந்துவதன் மூலம் நச்சுக் காய்ச்சல், வயிற்றுக்கழிவு, கொசுக்காய்ச்சல், எலும்பு முறிவுக் காய்ச்சல் போன்ற நோய்களும் பரவி வருகின்றன.

  தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதன்முதலில் எலும்பு முறிவுக் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டது குள்ளப்புரம் ஊராட்சியில்தான். கடும் குடிநீர்த் தட்டுப்பட்டால் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்தும், இருசக்கர வாகனங்களில் குடங்களை எடுத்துச்சென்றும் தோப்புகள், வயல்களில் தண்ணீரை எடுத்து வருகின்றனர். எனவே குள்ளப்புரம் ஊராட்சி நிருவாகம் வாரந்தோறும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் வேண்டுகின்றனர்.

68vaigaianeesu