இளைய சமூகமே!

பெரியாரைப் படி!

எரிமலையாய் எழுந்துன் உரிமையைப் பிடி!

 

காற்றும் மழையும் புயலும் – இங்கே

காண்ப துண்டோ நாட்டின் எல்லை? ஏற்றும் விளக்கின் ஒளியை – அந்த

இருளும் விழுங்கித் தடுப்பதும் இல்லை? போற்றும் மனித நேயம் – ஒன்றே

புத்தியில் கொண்ட தந்தை பெரியார்

ஏற்றிய சுயமரியாதை – இயக்கம்’

இம்மண் கண்ட மானுட ஏக்கம்!

 

கிழக்கிலோர் கதிரோன் எழுந்தால் – அந்த

மேற்கிலோர் கதிரோன் பெரியார் எழுந்தார்!

விழித்திடா இருட்டுக்கே வெளிச்சம் – வேண்டும்!

மேற்கிலோர் கதிரோன் சென்றால் இங்கே

கிழக்கிலோர் கதிரோன் பெரியார் – வந்தார்!

கிழக்கு மேற்கு வடக்குத் தெற்கென்(று)

உலகெலாம் பெரியார் பகுத்தறிவு – வெளிச்சம்

உலாவர மடமைகள் பூண்ட(து) அச்சம்!

 

உயரத்தி லிருந்து கண்ணன் – என்பான்

ஓதிய தாக உளறி வைத்த

உயர்ந்தான் தாழ்ந்தான் என்னும் – ஆரியர்

உளுத்துப் போன வர்ண பேதக்

கயமை நெறிகள் யாவும் – பெரியார்

கடைக்கண் பார்வை கண்ட போது

புயலில் சிக்கிச் சாய்ந்த – அந்தப்

பூவாழை மரமாய்ப் பிய்ந்து போனது!

 

சாதி மதங்கள் இருக்கும் – வரையில்

சரித்திரச் சண்டைகள் இருந்தே தீரும்!

நீதியின் நிழலாய் இருக்கும் – பெரியார்

நிமிர்ந்துள இமயம் ஆவார்! யாரும் மோதிடின் பொடியாய்ப் போவார்! – ஆல

மரத்தை அருகுபுல் ஆட்டல் உண்டோ ? வேத மந்திர மாய- மான்கள் வேட்டைப்புலியிடம் மீளல் உண்டோ ?

 

கடவுளர் கதைகள் வீழ்த்திய – பெரியார்!

கண்களில் பகுத்தறிவைப் பாய்ச்சிய பெரியார்!

மடமைப் பழமைகள் மாற்றிய – பெரியார்!

மானுடர் காதல்மணம் மலர்த்திய பெரியார்!

இடஒதுக் கீட்டைக் கொணர்ந்த – பெரியார்!

ஏளனப் பெண்ணடிமை ஒழித்த பெரியார்!

மடைதிற வெள்ளமாய்க் குறளொளி- ஏற்றி

மனஇருள் கீதையை மாய்த்த பெரியார்!

 

பெரியார்போல் மண்ணில் பிறந்தார் – இல்லை!

பெரியார்போல் பதவிகள் துறந்தார் இல்லை!

பெரியார்போல் வாழ்ந்து காட்டினார் – இல்லை!

பெரியார்போல் பகுத்தறி வூட்டினார் இல்லை!

பெரியாரே உலகப் பகுத்தறி(வு) – எல்லை!

பெரியாரே ஆரியப் பாம்புக்குத் தொல்லை!

பெரியாரை இளைய சமூக – மேபடி!

எரிமலையாய் எழுந்துன் உரிமை யைப்பிடி!

– கவிஞர் கண்மதியன்

கவிஞர் கண்மதியன்

கவிஞர் கண்மதியன்

http://www.viduthalai.in/page-1/168540.html

விடுதலை 16.09.2018