(வெருளி நோய்கள் 1416 -1420: தொடர்ச்சி)

ஒருவர் மீது நம்பிக்கை வைப்பது தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் நம்பக வெருளி.
நம்பிக்கை வைப்பது தொடர்பான பேரச்சம் பிறருடான உறவையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும். பொதுவாகக் காதலர்களிடையே நம்பிக்கை வெருளி ஏற்படுவது காதலை முறிக்கும்.
நம்பிக்கை மோசடியைச் சந்தித்தவர்கள் அல்லது பிறரது நம்பிக்கை மோசடியை அறிந்தவர்கள் பிறரை நம்புவது குறித்துக் கவலைப்படுவர்.
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்

எனப் ‘பறக்கும் பாவை’யில் வரும் கண்ணதாசன் பாடல் வரிகள் நம்பக வெருளியின் வெளிப்பாடே.
‘எங்க ஊர் ராசா’ படத்தில் வரும் கண்ணதாசனின் பாடலும் நம்பக வெருளியின் விளைவே!

குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க
தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா
பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே

என்னும் பாடல் பிள்ளைகளின் மீதான நம்பக வெருளியை உணர்த்துகிறது.
ஒரு நிகழ்வின் மீதான எதிர்பார்ப்பில் விளைவது நம்பிக்கை(faith). அந்த நம்பிக்கையை உறவு முறையில் அல்லது பணிமுறையில் ஒருவர் மீது வைப்பது நம்பகம்(trust).
காண்க: நம்பிக்கை வெருளி – Eupistophobia
00

நம்பிக்கை குறித்த வரம்பற்ற பேரச்சம் நம்பிக்கை வெருளி.
தனக்கோ பிறருக்கோ நேர்ந்த நம்பிக்கை மோசடியினால் நம்பிக்கை வெருளிக்கு ஆளாகின்றனர்.
வெறுங்கை என்பது மூடத்தனம்
உன் விரல்கள் பத்தும் மூலதனம்!
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்
உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!
தோள்கள் உனது தொழிற்சாலை
நீ தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை!
தோல்விகள் ஏதும் உனக்கில்லை
இனி தொடுவா னம்தான் உன்எல்லை!
என்னும் கவிஞாயிறு தாராபாரதியின் பாடல் வரிகளை நினைத்து உற்சாகம் கொண்டால் நம்பிக்யுடன் இருந்து நம்பிக்கை வெருளியை ஓட்டலாம்.
காண்க: நம்பக வெருளி – Pistanthrophobia
00

நீதி பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நயன்மை வெருளி.
இவ்வெருளிக்கு ஆளானவர்கள் சட்டத்தை மீறுவதற்கு அஞ்சுவர் என்ற அளவில் வரவேற்கத்தக்கதே. ஆனால், இதைப்பற்றிக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொள்வர்.
தவறான நீதிகளால், நீதி முறைமைகளால் வெறுப்பு ஏற்படுவதும் இதில் அடங்கும்.
சட்டத்தின் ஆட்சி சமம் என்று சொல்லிக் கொண்டே இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்கிவைக்கப்பட்ட எழுவரின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது பாதிப்புள்ளானவர்களுக்கும் அவர்களின் நலன் விரும்பிகளுக்கும் வெறுப்பு வருவது இயற்கைதானே!
பொய்ச்சான்று, தவறான உசாவல்(விசாரணை) முறைமை, அடக்கு முறைமை போன்றவற்றால் நீதி மறுக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்படும் என்ற பேரச்சமும் வருவது இயற்கையாகிறது. நீதி முறைமை குறித்து அச்சம் வராமல் பாதுகாவல் என்ற நம்பிக்கை வருவதே நன்று.
dik என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நீதி.
00

நரிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் நரி வெருளி. விலங்கு வெருளி வகையைச் சேர்ந்ததே இதுவும்.
தந்திர நரி(fox) வெருளியை Alepouphobia என்றும் குள்ளநரி(jackal) வெருளியை Sakaliphobia என்றும் வேறு படுத்திக் கூறுகின்றனர்.
00

உடல் நலத்திற்கான உணவுகள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நல உணவு வெருளி.

நலம் தரும் உணவு(ஆரோக்கியத்திற்கான உணவு) என்று மிகுதியாக உட்கொள்வதால் உடல் எடைகூடும் என்ற பேரச்சம் வரும். நல உணவுகளால் செலவு மிகும், சுவை இருக்காது, மன நிறைவளிக்காது என்று எண்ணிப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

ஊட்ட உணவு மிகு விருப்பர்களுக்கு நல உணவு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
Salute cibo என்னும் இத்தாலியச் சொல்லிற்கு நல உணவு எனப் பொருள்.
00