குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்!
மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து (திருக்குறள், ௪௱௫௰௯ – 459)
[ மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. ]
மனநலத்தால் மறுமை உண்டாகும். அதுவும் இன நலத்தால் சிறப்படையும்.
பதவுரை:
மன நலத்தின்=உள்ளத்தின் சிறப்பால்; ஆகும்=உண்டாகும்; மறுமை=மறுமுறை அடையும் நல்வாய்ப்பு; மற்று=மீண்டும்; அஃதும்= அங்ஙனம் ஆவதும்; இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு=வலிமை; உடைத்து=உடையது ஆகும்.
ஏமாப்பு=சிறப்பு; அரணாதல்; வலிமையாதல்; பாதுகாப்பு; இறுமாப்பு; ஏமம் + ஆப்பு – “ஆப்பு” சொல்லாக்க ஈறு.
மறு முறை பிறப்பதை மறுமை என்றனர். மறுமை என்றதற்கு மணக்குடவர் மறுமைப்பயன் என்றும் காலிங்கர் மறுமை என்றும் பரிதி மறுசென்மம் என்றும் பரிமேலழகரும் பின் வந்தவர்களும் இச்சொல்லுக்கு ‘மறுமை இன்பம்’ என்றும் பொருள் உரைத்துள்ளனர். செல்வம் என்று பொருள் கொண்டும் உரைத்துள்ளனர். இறந்தபின் அடையும் வீட்டின்பம் என்றே பலரது விளக்கங்களும் அமைந்துள்ளன. பேரா.முனைவர் சி.இலக்குவனார், அரசியலில் உள்ள இக் குறட்பாவிற்கு அங்ஙனம் பொருள் கூறுவது ஏற்புடைத்தாகத் தெரியவில்லை என்கிறார்.
மறுபிறப்பில் நம்பிக்கையில்லாத இன்றைய உரையாசிரியர்களில் சிலர், மறுமை என்ற சொல்லுக்கு “ஒருவன் இறந்த பிறகு அவன் பெயர் இங்கு நிலவுதல்” என்றும் “மறைந்த பின்னர் உண்டாகும் புகழ்” என்றும் “மறுமையெனும் மக்கள்” என்றும் “ஒரு நிலையினின்று மேல் செல்லும் மறு நிலை” என்றும் “பின்வரும் சந்ததி” என்றும் பொருள் கூறியுள்ளனர்.
“மறுமை-மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை” என்கிறார் பேரா.முனைவர் சி.இலக்குவனார். “அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லார்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு உடையராய் இருத்தல் வேண்டும். அங்ஙனம் அமர்ந்தாலும், நல்லறிஞர் புடைசூழ இருந்தால் எவரானும் அகற்ற முடியாத வலிமை பெற்றோராய் இருக்கலாம். இல்லையேல் சுற்றியிருப்போரே பொறாமை காரணமாகப் பதவியினின்றும் அகற்றுவதற்குரிய வழிகள் தேடுவர்.” (இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 746) என விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.
பேரா.சி.இலக்குவனார் கருத்தை அடியொற்றி மீண்டும் பெறும் பதவி வாய்ப்பு மட்டுமல்லாமல் எல்லாவகை நன்மைகளையும் மீளப் பெறுவதைக் குறிக்கும் வகையில் பொதுவாக “மீண்டும் கிடைக்கும் நல்வாய்ப்பு” எனப் பொதுவாக விளக்கியுள்ளேன்.
மறுபிறவியில் அடையும் இன்பம் என்றால், மறு பிறவி உள்ளதா? மறுபிறவி மனிதப்பிறவிதானா? என்றெல்லாம் வினாக்கள் வரும். இப்பிறவிக்கான எதிர்விளைவு அடுத்த பிறவியில் நிகழ்வதால் இப்பிறவியில் என்ன பயன்? அந்தந்தப் பிறவியில் உள்ள செயல்களுக்கான நன்மை தீமைகள் அந்தந்தந்தப் பிறவியிலேயே அமையும் என்றால்தான் வாழும் பிறவியிலேயே நன்மை கிடைக்க வேண்டும் என்றும் தீமை கிடைக்கக் கூடாது என்றும் தீச்செயல்களை விலக்குவர்; நற்செயல்கள் புரிவர்.
“இன நலம் ஏமாப்புடைத்து” என்பதற்கு மணக்குடவர், அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து என்கிறார்.
இனச்சுற்றம் மனநலத்தால் பெறும் சிறப்பை, நாம் பயனை மறுமுறை அடைவதற்குப் பாதுகாப்பாக விளங்கும். எனவே, மன நலத்தின் சிறப்பு இன நலத்தால் வலிமை பெறுகிறது எனலாம்.
உள்ளத்தின் சிறப்பால் இன நலத்தின் பாதுகாப்புடன் மீள் நன்மையை நாம் அடைவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply