நவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்!

உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாள் கொண்டாடத் தமிழக அரசு உலகத் தமிழ்நாளை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைப்பற்றித் தெரிவிக்கும் முன்னர் ‘இந்தி நாள்’ குறித்து அறிந்து கொள்வோம்!

ஒவ்வோர் ஆண்டும் செப்.14 இந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. “இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக, 1949 ஆம் ஆண்டு செப். 14 அன்று ஏற்றது. அதற்காக,  இந்தியை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்துவதை ஊக்கப்படுத்துவதற்காக இந்நாள்” என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் ஆட்சி மொழித் துறை இவ்விழாவினை நடத்துவதால் இவ்வாறு கூறப்படுகிறது. எனினும் இந்தியில் கலை, இலக்கியம், கவிதை, பேச்சுத்திறன், படைப்புத்திறன் முதலியவற்றை ஊக்கப்படுத்தவே ‘இந்தி நாள்’ நடை பெறுகிறது.. 

இந்தியில் செயல்பாடுகளை மேற்கொள்வோருக்கு ஆண்டுதோறும் இந்தி விருது வழங்கப்படுகிறது. முதன்முதலாக, 1975 ஆம் ஆண்டு இந்திராகாந்தியின் நெருக்கடிக்கால ஆட்சியின்பொழுதுதான் இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும் என அரசு அறிவித்தது.  இத்துறையே 1975 சூனில்தான் உள்துறையில் கீழான ஒரு துறையாக உருவாக்கப்பட்டது. அவ்வாறிருக்க அதற்கு முன்னரே இந்தி நாள் குறித்து அரசாணை இருப்பதாகக் கூறுவது தவறாகப் பரப்பப்படும் செய்தியாகும்.

தேசிய மொழி பரப்புரைக்கழகத்தின் (Rashtrabhasha Prachar Samiti) வேண்டுகோளுக்கிணங்கவே செப்.14 இந்தி மொழி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்தியை மத்திய அரசின் மொழியாகவும் நாட்டின் ஒரே மொழியாகவும் ஆக்க வேண்டும் எனப் பாடுபட்ட பியோஃகர் இராசேந்திர சிம்ஃகா (Beohar Rajendra Simha) பிறந்த  நாளைத்தான் இந்தி நாளாகக் கொண்டாடுகின்றனர் என்கின்றனர். அவரின் ஐம்பது ஆவது பிறந்த நாள் இந்தி நாள் ஆக அறிவிக்கப்பட்டதாக இந்தி நாள் குறிப்பு தெரிவிக்கிறது. இவர் பிறந்த நாள் 15.06.1926. எனவே, இது தவறாகும். மேலும் இவரது பிறந்த நாள் இந்தி நாளாக அறிவிக்கப்பட்டதாகப் பரப்பப்பட்டதால் 14/09 இவர் பிறந்த நாள் எனச் சிலர் எழுதி வருகின்றனர். மத்திய ஆளுங்கட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த இந்தி வெறியர்கள் என அழைக்கப்பட்ட  பியோஃகர் இராசேந்திர சிம்ஃகா, அசாரி பிரசாத்து திவேதி(Hazari Prasad Dwivedi), காகா கலேல்கர்(Kaka Kalelkar), மைதிலி சரண் குப்தா (Maithili Sharan Gupt), சேத்து கோவிந்த தாசு(Seth Govind Das) ஆகியோர் முயற்சியால் இந்தி நாள் அறிவிக்கப்பட்டது. பியோஃகர் இராசேந்திர சிம்ஃகா இந்திய அரசியலமைப்பு யாப்பில் விளக்கப்படங்கள் வரைந்த ஓவியக் கலைஞர். எனவே, தங்கள் கோரிக்கைக்கிணங்க இந்தியை அலுவல் மொழியாக அறிவிக்க இருப்பதை அறிந்து அதனை ஏற்று அறிவிக்கும் முன்னரே இந்தி நாளை அறிவித்துத் தேசிய மொழி பரப்புரைக்கழகத்தின் சார்பில் கொண்டாடி உள்ளார் என்பதுதான் உண்மையாக இருக்கும்.

செம்மொழி என்று ஏற்கப்படாமலேயே சமசுகிருதத்தைச் செம்மொழி எனச் சொல்லி நிதியை வாரி வழங்கிய ஏமாற்றுவேலைபோல் இந்தி நாளிலும் குளறுபடி இருப்பதாகத் தோன்றுகிறது. ஏனெனில், இந்தியை அலுவல் மொழியாக ஏற்கப்பட்ட செப்.14 இந்தி நாள் என 1949 இல் அறிவிக்கப்பட்டதாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய அரசியல் யாப்பு, அரசியலமைப்பு வரையறை மன்றத்தால் ஏற்கப்பட்டது 1949 நவம்பர் 26இல்தான். நடைமுறைக்கு வந்தது 1959 சனவரி 26தான்.

இந்திய நிலப்பகுதியில் வாழும் இன மக்களின் தாய்மொழிகள் யாவுமே தேசிய மொழிகள்தாம். இந்தி அரசியல் யாப்பின் 8 ஆவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழிகளுமே முதன்மைத் தேசிய மொழிகளாகும். அவ்வாறிருக்க இந்தியை மட்டும் தேசிய மொழி என்று சொல்வது தவறாகும். அவ்வாறு சொல்லிச் சொல்லித்தான் பிற மொழித் தேசிய இனத்தவரை இந்தியை ஏற்கச்செய்கிறது மத்திய அரசு.

இந்தி நாள் தவிர, 2006 முதல் ஒவ்வோர் ஆண்டும் சனவரி 10, உலக இந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. உலக இந்தி மொழிக் கருத்தரங்கம் நடைபெற்ற நாளைத்தான் உலக இந்தி மொழி நாள் எனக் கொண்டாடுகின்றனர்.

இந்தி மொழி பேசுவோர் இந்தி நாளைக் கொண்டாடுவதிலும் அதற்காகச் செலவிடுவதிலும் தவறில்லை. ஆனால் பல தேசியமொழிகள் உள்ள நாட்டில் ஒரு மொழிக்கு  மட்டும் மத்திய அரசு செலவிடுவது முறையல்ல. இச் சூழலில் நாம் மத்திய அரசை நடுநிலைமையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்துவதுடன் தமிழ் நாள் அறிவித்துக் கொண்டாடச் செய்ய வேண்டும்.

நாம் தமிழ் நாள், உலகத் தமிழ் நாள் என இரண்டு நாளைக் கொண்டாடாமல் ‘உலகத்தமிழ் மொழி நாள்’ என ஒன்றைக் கொண்டாடினாலே போதுமானது. தாய்மொழி நாளன்று தமிழ்நாளைக் கொண்டாடலாம்.

அவ்வாறாயின் நாம் எந்த நாளை உலகத் தமிழ் நாளாகக் கொண்டாடுவது? இந்தி மொழியினர் இந்திப்பரப்புரைக்காகப் பாடுபட்டவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகக் கூறுகின்றனர் அல்லவா? அதுபோல் நாமும் தமிழுக்காகப் பரப்புரை மேற்கொண்ட தமிழறிஞர் ஒருவர் பிறந்த நாளை உலகத் தமிழ் நாள் என அறிவிக்க வேண்டும்.

நவம்பர் 17 ஐ நாம் உலகத்தமிழ் நாளாகக் கொண்டாட வேண்டும். ஏன் இந்த நாள்?

உலகிலேய மொழிக்காக இரு முறை சிறைசென்ற முதல் தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த நாள் இந்நாள். தமிழ்ப்போராளி இலக்குவனார் உலகில் கிடைத்துள்ள முதல் இலக்கண இலக்கிய நூலான தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்; படிக்கும் காலத்திலிருந்தே விடுமுறை நாள்களில் தமிழ்ப் பரப்புரை மேற்கொண்டவர்; மாலைநேரங்களிலும் விடுமுறை நாள்களிலும், அஞ்சல் வழியிலும் தமிழைக் கற்பித்தவர்; புலவர்கள் இலக்கியங்களாக இருந்த தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலானவற்றை மக்கள் இலக்கியங்களாக மாற்றி மக்களிடையே கொண்டு சேர்த்தவர்; இதழ்கள் மூலமாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் விழாக்கள் நடத்தியும் தமிழ்க்காப்பு உணர்வை மக்களிடையே விதைத்துப் பரப்பியவர்; தமிழ்க்காப்புக்கழகம் முதலான பல்வேறு அமைப்புகள் மூலம் தமிழ் என்றும் திகழப் போராடியவர்; தமிழ்ப் பயிற்றுமொழிக்காகத் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற்கொள்கிறார் எனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டுச் சிறை வாழ்க்கை மேற்கொண்டவர். அறிஞர்கள் பலரும் இலக்குவனாரைத் தமிழ்த்தாயின் மறுவடிவம் என்றும் தமிழ்த்தாய் என்றும் போற்றுகின்றனர். இந்தியைப் பரப்பியவர் பிறந்த நாளில் இந்தி நாள் கொண்டாடும் பொழுது தமிழுக்காக வாழ்ந்து ‘தமிழ்த்தாய்’ எனப் போற்றப்படும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் பிறந்த நாளை உலகத் தமிழ் நாளாகக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும்.

மறைமலையடிகள் நகரில் உள்ள திருவள்ளுவர் மன்றம், மதுரை தமிழ்க்காப்புக்கழகம், எழுத்தாளர் கழகம் முதலான தமிழ் அமைப்புகள் பலவும் இலக்குவனார் பிறந்த நாளைத் ‘தமிழ் எழுச்சி நாளாகக்’ கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. தமிழ் எழுச்சிக்காகப் பேராசிரியர் இலக்குவனார் பிறந்த நாளான நவம்பர் 17ஐத் தமிழக அரசு உலகத்தமிழ் நாள் என அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தாலே தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உலகத் தமிழ் நாளைக் கொண்டாடுவார்கள்.

தமிழக அரசு மத்திய அரசையும் பிற மாநில அரசுகளையும் வலியுறுத்தி உலகத்தமிழ்நாள் கொண்டாடச் செய்ய வேண்டும். பன்னாட்டு மன்றத்தையும்  இதனை ஏற்று அறிவிக்கச் செய்ய வேண்டும். உலக நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில்  – குறிப்பாகத் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள தூதரகங்களில்- ஆண்டுதோறும் உலகத் தமிழ்நாள் கொண்டாடச் செய்ய வேண்டும். மத்திய அரசு ஏற்குமா என்றால் எதற்கு இருக்கின்றனர் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

தமிழ் என்பது மொழியை மட்டும் குறிப்பதில்லை. இலக்கியம், பண்பாடு, கலை, நாகரிகம், வீரம் முதலான பலவற்றையும் குறிப்பது. எனவே, உலகத் தமிழ் நாள் மூலம் தமிழர்கள் எழுச்சி பெறவும் தமிழ் அறிவியல் மொழியாகவும்  பயன்பாட்டு மொழியாகும் திகழ்ந்து எல்லா நிலையிலும் தமிழ், தான் இழந்த இடத்தைப் பெறவும் வழி வகுக்கும். இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் உலகத் தொடர்பு மொழியாகவும் தமிழ் திகழும் காலத்தை விரைவில் கொண்டு வரும்.

அரசு அறிவிக்கும் வரை காத்திராமல் உலகெங்கும் உலகத் தமிழ்நாள் கொண்டாட ஏற்பாடு செய்வோம்! உலகத் தமிழ் நாள் கொண்டாடித் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல

பியோஃகர் இராசேந்திர சிம்ஃகா
பியோஃகர் இராசேந்திர சிம்ஃகா