நீ உயர

உயரத் துடிக்கிறாய் உரிய வழியெது

உனக்குத் தெரியுமா தம்பி – கொஞ்சம்

உட்கார்ந்து முதலில் சிந்தி

உயர்வுத் தாழ்வுக்கோர் உண்மைக் காரணம்

உள்ளத்தில் இருக்குது தம்பி – அதை

ஒழுங்கு படுத்துநீ முந்தி

வெள்ளத்தின் அளவே தாமரை மலருமே

வெருங்குளமானால் அழியும் – புது

வெள்ளத்தில் மீண்டும் தழையும்

உள்ளத்தில் உயர்ந்தால் உயர்ந்திடும் வாழ்க்கை

உன்வச மாகிடும் உலகம் – இதை

உணரத் திருக்குறள் உதவும்

நல்லதை நினைத்து நல்லதை உரைத்தால்

நல்லவை வந்துனை சேரும் – நீ

நடந்தால் வாழ்த்துகள் கூறும்

பொல்லாத நரியின் குணங்கள் வளர்ந்தால்

புள்ளி மான்களா கூடும் – இந்தப்

புவியே உனைவெறுத் தோடும்

விதைக்கிற எண்ணம் செயலாய் முளைக்கும்

விளைநிலம் தானே உள்ளம் – அது

வீணாய்க் கிடந்தால் பள்ளம்

விதைப்பதை விதைத்தால் முளைப்பது முளைக்கும்

விதியெனக் கொண்டால் விதிதான் – இதை

விளங்கிட சொன்னால் மதிதான்

நன்றி : பின்னணிப் படம்: இராமலட்சுமி இராசன், பிளிக்கர்