தமிழ்ச்சரம்.காம் – வலைப்பதிவர்களுக்கான

சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி

தமிழ் வலைத்தள எழுத்துகளை ஒருங்கிணைத்து எழுதுபவர்களையும், வாசிப்பவர்களையும் ஊக்குவிப்பதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) இந்தக் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது.

இந்தச் சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கு இரண்டு பிரிவுகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவு-1 : (உறவுகள் – என் பார்வையில்)

தாய், தந்தை என்ற உறவில் தொடங்கி பின் மகன், மகள், தம்பி, தங்கை, காதலன், காதலி, அத்தை, மாமன்…. என நீளும் பல உறவுகளின் சங்கமமே மனித வாழ்வு.  ஆனால், இன்றைய குமுகாயச் சூழலில் உறவுகளுக்கிடேயே எதிர்பார்ப்புகள் மாறி நாளுக்கு நாள்  உறவு  சிக்கலாகிக் கொண்டே இருக்கின்றது.

இந்த உறவுகளில்,  நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றிரண்டு உறவு குறித்தும், உங்கள் பார்வையில் அந்த உறவுகளைப் பேணி, மேம்பட செய்ய வேண்டியது குறித்தும் “உறவுகள் – என் பார்வையில்” என்ற தலைப்பில் எழுதுங்களேன்.

பிரிவு-2 : (அன்றாட வாழ்வில் நகைச்சுவை)

‘நகைச்சுவை’ தமிழர் வாழ்வில் இழையோடிய ஒரு பண்பு என யாராவது சொன்னால் அதை நாம் கொஞ்சம் மாற்றுக் கண்ணோட்டத்தோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது. 

ஏனேன்றால், இங்கே பட்டி மன்றங்கள், திரைப்படங்கள், மேடை நாடகங்கள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களைத் தாண்டி அன்றாட வாழ்வில் ஒரு வேடிக்கையான தருணம், முரண்பாடு, சிறு குழப்பம் போன்றவை கண்ணுக்குப்பட்டால் அதில் உள்ள நகைச்சுவை பெரும்பாலும் சுவைக்கப்படுவதில்லை என்பதே உண்மை.

இது பற்றிய உங்கள் பார்வையை “அன்றாட வாழ்வில் நகைச்சுவை” எனும் தலைப்பில் (கொஞ்சம் நகைச்சுவையாகவே) எழுதுங்களேன்.

பரிசு விவரங்கள்:

முதல் பரிசு உரூ. 3,500

இரண்டாம் பரிசு உரூ. 2,500

மூன்றாம் பரிசு உரூ. 1,000

 

விதிமுறைகள்:

இந்தக் கட்டுரைகளைப் போட்டியாளர்கள் தங்களுடைய (blogspot, wordpress  போன்ற) வலைப்பூ (blog) அல்லது இணையத்தளங்களில் எழுதி வெளியிடவேண்டும்.

அந்தப் பதிவில்   #tccontest2020 என்ற குறிச்சொல்(tag) சேர்த்திருக்க வேண்டும்.

அந்தத் தளங்கள் தமிழ்ச்சரத்துடன் முறையாக இணைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டியது இன்றியமையாதது..

முறையாகத் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பட்ட தளங்களில் இருந்து உங்கள் படைப்புகளை எழுதி வெளியிடவேண்டிய நாள் பங்குனி 19, 2051- சித்திரை 01, 2051 / 01-ஏப்பிரல்-2020 முதல் 14-ஏப்பிரல்-2020 வரை (இந்திய நேரம்).

அனைவருக்கும் வாய்ப்பு தரும் வகையில் ஒருவர் மேலே சொன்ன ஒரு பிரிவில் மட்டுமே எழுத இசைவளிக்கப்படுவார்.

வெற்றி பெற்ற படைப்புகள் பற்றிய அறிவிப்பு மே முதல் வாரம் அறிவிக்கப்படும்.

மேலே சொன்ன உள்ளடக்கத்துடன் இல்லாத படைப்புகள் ஏற்கப்படா.

படைப்புகள் குறைந்தது 1000 சொற்களாவது இருக்கவேண்டும்.

இந்தப் படைப்புகள் இதற்கு முன் மற்ற இதழ்கள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் வெளியிடப்படவில்லை என்பதைப் படைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

தமிழ்ச்சரம் தளத்திற்குச் சொடுக்குக.