(சட்டச்சொற்கள் விளக்கம் 31 –40 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

41. Abandonedகைவிடப்பட்ட  

கைவிடப்பட்ட குடும்ப உறுப்பினர், கைவிடப்பட்ட சொத்து, கைவிடப்பட்ட ஏரி, கைவிடப்பட்ட சுரங்கம், கைவிடப்பட்ட பணிகள் என்பன போன்று பாெறுப்பைத் துறக்கும் நிலை.
42. Abandoned childகைவிடப்பட்ட குழந்தை  

பெற்றோர்/உறவினர்/பாதுகாவலர்/பேணுநர் இன்றி விடப்படும் குழந்தை.  

அனாதை/உறவிலி/ஏதிலி எனக் குழந்தை மீது அவமுத்திரை குத்தக்கூடாது. எனவே, கைவிடப்பட்ட குழந்தையைக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை அல்லது கேட்பாரற்ற குழந்தை எனக் குறிப்பிடுகின்றனர்.  

இந்தியத் தண்டிப்புச்சட்டம், இந்து மகவேற்பு பேணுகைச் சட்டம் 1956 ஆகியன கைவிடப்பட்ட குழந்தை தொடர்பாகக் கூறுகின்றன.  

குழந்தையைக் கைவிடுவது இந்தியத் தண்டிப்புச் சட்டத்தின் 317ஆவது பிரிவின் கீழ்த் தண்டனைக்குரியது.  

காண்க : Abandonment of a child
43. abandoned goodsகைவிடப்பட்ட பண்டங்கள்  

கைவிடப்பட்ட பொருள்கள் என்பன பெறப்படாத பொருள்களாகும்.  

சரக்கு பெறவேண்டியவரைக் கண்டறிய முடியாச் சூழலில் அல்லது சரக்கு பெறுவதற்குரியவர் அதனை ஏற்காத அல்லது மறுத்த சூழலில் அல்லது சரக்ககத்தில் சட்ட பூர்வமாக வைத்திருக்கக்கூடிய கால வரம்பு கடந்த பின்பும் யாரும் பொருள்களை எடுத்துச்செல்ல முன் வராமையால் இருக்கக்கூடிய பொருள்கள். சுருக்கமாக, உரியவரால் எவ்வகைத் தகவலுமின்றி ஏற்கப்படாதவை கைவிடப்பட்ட பண்டங்களாகும் எனலாம்.  

ஊர்திக் காப்பு நிறுத்திடத்தில் குறிப்பிட்ட கால அளவு கடந்த பின்னும் எடுத்துச் செல்லப்படாத வற்றிற்கும் இது பொருந்தும்.

சுங்கத்துறையில் பிரிவு 48(1) / 61இன்படிக் கோரப்படாத அல்லது எடுக்கப்பட்ட பொருள்களாகும்.

கெட்டுவிடக்கூடிய உணவுப்பொருள் அல்லது விரைந்து அழியக்கூடிய பொருள்கள் குறிப்பிட்ட காலவரம்பிற்குள் இருந்தாலும், அழிநிலை வரும் பொழுது கைவிடப்பட்ட பண்டமாகக் கருதி நடவடிக்கை எடுக்கலாம்.   சில நேரங்களில் கவனக் குறைவின் காரணமாகவோ குறித்த அளவிற்குமேல் பொருள்களை எடுத்துச் செல்ல இயலாமையாலோ சில பண்டங்கள் விடப்பட்டிருக்கலாம். இவற்றைக் கைவிடப்பட்ட பண்டங்கள் எனக் கருதக்கூடாது.
44. abandoned groundsகைவிடப்பட்ட நிலங்கள்  

கைவிடப்பட்ட நிலங்கள் என்பன கைவிடப்பட்ட மனையிடங்கள், திடல்கள் ஆகியவற்றையும் குறிக்கும்.

பயன்படுத்தப்படாமல் அல்லது செப்பனிடாமல் உரியவர் கவனிப்பின்றிப் பாழடைந்த நிலைக்கு ஆளாகும் சுற்றுப்புறத்திற்கும் பொதுமக்களுக்கும் கேடு அல்லது இடர் விளைவிக்கும் நிலங்கள் கைவிடப்பட்ட நிலங்களாகும்
45. abandoned propertyகைவிடப்பட்ட சொத்து;  

நிலையாக ஒரு சொத்தை அல்லது உடைமையை விட்டுவிட்டுச்செல்லுதல்.  

வாடகைதாரர் அல்லது குத்தகைதாரர் குடியிருந்த வீட்டை அல்லது பயன்படுத்திய நிலத்தை விட்டுச் செல்லும் பொழுது தனக்குரியவற்றைக் கைவிட்டுவிட்டுச் செல்லுதல்.

தன் கட்டுப்பாட்டில் உள்ள உரிமைப் பொருளைக் குறிப்பிட்ட இடத்தைவிட்டுப் பெயரும் பொழுது தொடர்பயன்பாட்டிற்கு எடுத்துச்செல்லாமல் அல்லது எடுத்துச் செல்ல இயலாமல் உரிமையைக் கைவிடுதல்.

போர், கலவரம், அல்லது புயல், வெள்ளம், நில நடுக்கம், கடல்கோள் முதலான இயற்கை இடர் போன்ற சூழலில் ஒரு நகரம் அல்லது இடம் அல்லது ஒரு நாட்டைவிட்டுப் புலம் பெயர்வோர் தமக்குரிய உடைமைகளைக் கொண்டு செல்ல இயலாமல் கைவிடப்பட்ட சொத்து.  

ஆதனம் என அகராதி ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ளது. நீளுதல் என்னும் பொருளில் வரும் பொழுது இது தமிழ்ச்சொல்லே. ஆனால், கைவிடப்பட்ட சொத்து என்னும் பொருளில் தமிழ்ச்சொல்லன்று.
46. Abandoneeகைவிடப்பட்டவர்   வாழ்க்கைத் துணைவரால் கைவிடப்பட்டவர், பெற்றோரால் கைவிடப்பட்டவர், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர் எனப் பொறுப்புகளைக் கைவிடுபவர்களால் ஆதரவற்றவர்களாக ஆகிறவர்கள்.
47. Abandoningகைவிடல்   தன் பொறுப்பிலுள்ள ஒன்றின் மீதான பொறுப்பைத் துறத்தல்.
48. Abandoning childகுழந்தையைக் கைவிடல்   தன் பொறுப்பிலுள்ள குழந்தை மீதான பொறுப்பைத் துறத்தல்.   காண்க: Abandonment of a child
49. Abandoning without reasonable causeதக்கக் காரணமின்றிக் கைவிடுதல்   பிரிந்து செல்வது என்பது மற்ற துணையின் அனுமதியின்றியும் சரியான காரணமின்றியும் கைவிடுவது பிரிந்து செல்வதாகும். இது திருமணக் கடமைகளில் இருந்து விலகுவதாகும். முன்பு, பிரிந்து செல்வது நீதித்துறை பிரிவிற்கான ஒரு காரணமாக மட்டுமே இருந்தது. ஆனால் 1976 இல் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு இதனைத் திருமண விலக்கிற்கான காரணமாகவும் மாற்றியது.   2014இல் மும்பை நீதிமன்றம், சீமா பட்டீல் வழக்கில், தக்கக் காரணமின்றித் துணையைப் பிரிவது கொடுமை என்றும் மணவிலக்கிற்குத் தக்கக் காரணம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
50. Abandonment  கைவிடுகை  

கைவிடுதல்,   விடுகை,  விட்டு விடுகை, துறப்பு   திட்டத்தை அல்லது செயலைத் தொடராமல் விட்டு விடுதலைக் குறிக்கும்.   உரிமை கோரல், உரிமை வழக்கு நடவடிக்கைகள், மேல் முறையீடு, உடைமை, வட்டி,  வருவாய் ஆகியவற்றின் மீதுள்ள உரிமையைக் கைவிடல்  அல்லது மீள் கோரல் இல்லை என்ற நிலைப்பாட்டில் முற்றிலுமாக உரிமையைக் கைவிடல்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்