(என் சரித்திரம் 38: என் கல்யாணம் தொடர்ச்சி)

என் சரித்திரம்

என் கல்யாணம்


எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணத்திற்குமுன் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு நிறைபணி நடைபெற்றது. விநாயக மூர்த்தியின் திருவுருவம் முழுவதையும் சந்தனத்தால் மறைத்துவிடுவார்கள். அதற்காக ஊரினர் யாவரும் வந்து சந்தனம் அரைப்பார்கள். ஊரில் பொதுவாக ஒரு பெரிய சந்தனக்கல் இதற்காகவே இருக்கும். அதைக்கொணர்ந்து வைத்து அருகில் இரண்டு கவுளி வெற்றிலையும் சீவலும் வைத்துவிடுவார்கள். பொடிமட்டையும் வைப்பதுண்டு. சந்தனம் அரைக்க வருபவர்கள் அவற்றை அடிக்கடி உபயோகப்படுத்திக்கொண்டு தங்கள் கைங்கரியத்தைச் செய்வார்கள்.

அபிசேக ஆராதனைகளுக்குப் பிறகு நிவேதனமான பழங்களும் சுண்டல், வடைப்பருப்பு, மோதகம் முதலியவைகளும் விநியோகம் செய்யப்படும். மோதகம் ஒரு மாம்பழ அளவு இருக்கும். ஒவ்வொரு பொருளையும் இன்னார் இன்னாரே விநியோகிக்க வேண்டுமென்ற வரையறை உண்டு. அவர்கள் ஊரிலிருக்கும் காலங்களில் அந்த விநியோகத்தைத் தவறாமற் செய்து வருவார்கள். இந்த நிறைபணியோடு எங்கள் வீட்டிலும் பெண் வீட்டிலும் குலதெய்வ சமாராதனைகளும் நடைபெற்றன. என் கல்யாணம் அக்காலத்திற்கேற்ப விமரிசையாகவே நடை பெற்றது. குளங்களிலும் வாய்க்கால்களிலும் நிறைய சலம் இருந்தது. ஆதலின் விருந்தினர்களது குளியல் முதலிய சௌகரியங்களுக்குக் குறைவு நேரவில்லை. நலங்கு நடைபெற்றபொழுது நானே பத்தியங்கள் சொன்னேன். அவற்றை என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் எனக்குச் சொல்லித் தந்தார். எங்கள் குலகுருவாகிய ஐயா வாத்தியாரென்பவர் எல்லா வைதிக காரியங்களையும் முறைப்படி நடத்தி வைத்தார்.

சிதம்பர உடையார் வருகை


விபவ வருடம் ஆனி மாதம் 4-ஆம் தேதி (16-6-1868) என் விவாகம் நடந்தது. அன்று இரவு மறவனத்தம் சிதம்பர உடையார் குதிரை மீதேறி வந்து சேர்ந்தார். அவர் விவாகத்துக்கு முதல் நாளே வந்திருப்பார். அவர் தந்தையாருக்கு அன்று திதியாகையால் அதைச் செய்துவிட்டு விவாக தினமாகிய மறுநாட் காலையிலே புறப்பட்டு இரவு மாளாபுரம் வந்தார். வந்தவுடனே என் தந்தையாரைக்கண்டு தாம் முன்பே வாக்களித்திருந்தபடி ஐம்பது ரூபாய் அளித்தார். தக்க சமயத்தில் அவர் செய்த உபகாரத்தைப் பெற்று என் தந்தையார் மிக்க நன்றி பாராட்டினார்.

அவர் குதிரையின்மீது ஏறிவந்து இறங்கியபோது அவர் ஒரு பெரிய செல்வரென்பதைக் கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் அறிந்துகொண்டனர். அவர் கலகலவென்று பணத்தை எடுத்துக்கொடுத்தபோது எல்லாரும் ஆச்சரியமுற்றனர். என் தந்தையார் மிக்க செல்வாக்குடையவரென்ற எண்ணம் அவர்களுக்கு அப்போது உண்டாயிற்று. அரியிலூர் முதலிய இடங்களிலிருந்தும் சில வேளாளச் செல்வர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் தங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள். அவரவர்களுக்கு ஏற்றபடி உபசாரங்கள் நடைபெற்றன. எந்தையாரிடம் அவர்கள் காட்டிய மரியாதையைக் கண்ட என் மாமனாரும் அவரைச் சார்ந்தவர்களும், “நல்ல இடத்தில்தான் நாம் சம்பந்தம் செய்திருக்கிறோம். பெரிய மனுசர்களெல்லாம் இவருக்குப் பழக்கமாக இருக்கிறார்கள். நம் மாப்பிள்ளைக்குக் குறைவு ஒன்றும் இல்லை” என்ற தைரியத்தை அடைந்தார்கள்.

கிருகப் பிரவேசம் கல்யாணம் நான்கு நாள் நடைபெற்றது

ஐந்தாம்நாள் மாலையில் உத்தமதானபுரத்தில் எங்கள் வீட்டில் கிருகப்பிரவேசம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று புறப்படவேண்டிய சமயத்தில் இடியுடனும் மின்னலுடனும் பெரிய மழை வந்துவிட்டது. நாங்கள் மாளாபுரத்திலிருந்து புறப்பட்டு உத்தமதானபுரம் செல்ல வேண்டும். பெண் வீட்டுக்காரர்கள் மழையிற் புறப்பட்டுப் போகக்கூடாது என்றனர். மழை நின்ற பிறகும் செல்வதைத் தடுத்தனர். என் தகப்பனாரோ மிகவும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்; விசேடமான உணவு வகைகளைச் சித்தம் செய்வித்திருந்தார். அவ்வளவும் வீணாகிவிடுமேயென்று அவர் கவலைப்பட்டார்.

கல்யாணத்துக்கு வந்தவர்களுள் தியாகசமுத்திரம் விசுவநாத சாத்திரிகளென்பவர் ஒருவர். அவர் சிறந்த சம்சுகிருத வித்துவான். சில்லா நீதிபதியாக இருந்த பருனல் துரை என்னும் ஐரோப்பிய கனவானுக்கு சம்சுகிருத பாடம் கற்பித்து வந்தவர்; சோதிட சாத்திரத்திலும் அவருக்குப் பழக்கம் இருந்தது. அவர் என் தந்தையாருக்கு நண்பர். அவரிடம் என் தந்தையார் “மழை வந்து நின்றுவிட்டதே; இப்போது பிரயாணப்படக் கூடாதா?” என்று கேட்டார். அவர், “அதனால் ஒன்றும் கெடுதி இல்லை. நல்லதுதான்” என்று கூறினர். பெண் வீட்டுக்காரர்களிற் சிலர் அப்போது மறுத்துக் கூறினர். உடனே சாத்திரிகள் பல வடமொழிச் சுலோகங்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துச் சொல்லி, “மழை வந்தது நல்ல சகுனமே; புறப்படுவது நன்மையே” என்று நிரூபித்தார். என் தந்தையாருக்கு அந்த மழையால் உண்டாகிய கலக்கம் சாத்திரிகளுடைய வார்த்தைகளால் நீங்கவே உள்ளம் குளிர்ந்தது. நாங்கள் உத்தமதானபுரத்திற்குப் புறப்பட்டு விட்டோம்.

கிருகப்பிரவேசம் சிறப்பாக நிகழ்ந்தது. கல்யாணச் சிறப்புக்குமேல் கிருகப்பிரவேசச் சிறப்பு அதிகமாக இருந்தது. “ஊரைவிட்டுப் போய்விட்டமையால் இவர்களுக்குச் சௌகரியம் அதிகமாயிற்றே ஒழியக் குறைவொன்றுமில்லை” என்ற கருத்து ஊராருக்கு உண்டாயிற்று.

வரகூர் கோபால பாகவதர்

கல்யாணம் நிறைவேறிய பிறகு சில நாட்கள் உத்தமதானபுரத்தில் தங்கியிருந்தோம். இடையே அருகில் ஓர் ஊரில் என் வேட்டகத்து அம்மான் வீட்டில் நடைபெற்ற விசேடத்திற்கு நானும் வேறு சிலரும் போயிருந்தோம். என் தந்தையார் மாத்திரம் ஊரில் இருந்தார். அப்போது உத்தமதானபுரத்தில் எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது. அக்கல்யாணத்துக்கு வரகூரிலிருந்து கோபால பாகவதர் என்னும் பெரியார் தம் பரிவாரத்துடன் வந்திருந்தார். அவர் அரிகதை செய்வதில் மிக்க புகழ் பெற்றவர். சிறந்த ஆசார அனுட்டானமுடையவர். அவர் அக்கல்யாணத்தில் அரிகதை நடத்தினார். அதனைக் கேட்ட என் தந்தையார் நான் அப்போது அங்கே இல்லாதது குறித்து வருந்தினார். நான் வந்தவுடன், “கோபால பாகவதர் கதை பண்ணினார். நீ கேட்டிருந்தால் பல விசயங்களைக் கிரகித்திருப்பாய்” என்றார். பாகவதர் அன்றும் இருந்தார். நான் சென்று அவரைத் தரிசித்து நமசுகாரம் செய்தேன். பளபளவென்ற அவர் திருமேனியும் விபூதி தாரணமும் துளசிமணி மாலையும் தூய உடையும் என் கண்களைக் குளிர்வித்தன. அவருடன் இருபது, முப்பது பாகவதர்கள் வந்திருந்தனர். எல்லாரும் தூய்மையும் பக்தியும் உருவெடுத்தாற்போல் தோன்றினார்கள்.

கோபால பாகவதர் என்னைச் சில கீர்த்தனங்கள் பாடச்சொல்லிக் கேட்டார். சில தமிழ்ச் செய்யுட்களையும் அவர் விருப்பப்படி சொல்லிக் காட்டினேன். அவர் மனமகிழ்ந்து என்னை ஆசீர்வாதம் செய்தார்.

மஞ்சள் வேஷ்டியுடன்

சில தினங்கள் உத்தமதானபுரத்தில் இருந்தபிறகு என் தந்தையாரும் தாயாரும் நானும் குன்னம் வழியாக மீட்டும் களத்தூருக்கே வந்து சேர்ந்தோம். நான் மஞ்சள் வேட்டியணிந்த கல்யாணக் கோலத்துடன் குன்னம், கார்குடி முதலிய இடங்களில் உள்ளவர்களின் விருப்பப்படி அங்கங்கே சென்று பெரியோர்களுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றேன்.

பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு கிருகத்தனாகிய அக்கோலத்தைக் கண்டு சந்தோசமடைந்தவர்களுள் முதல்வர் என் அன்னையார். என் தந்தையார் என் கல்யாண விசயத்திற்பட்ட சிரமத்திற்கு அளவில்லை. ஆதலின் “நல்ல காரியத்தை விரைவில் நன்றாக நிறைவேற்றினோம்” என்ற திருப்தியினால் அவர் உற்சாகம் பெற்றிருந்தார்.

ஒரே நாட்டம்

கல்யாணத்திற்குச் சிலநாள் முன்பிருந்து கல்யாணமான பிறகு சிலநாள் வரையிலும் எனக்கும் ஒரு புதிய உற்சாகம் இருந்தது. பார்க்க வேண்டியவர்களை யெல்லாம் பார்த்துவிட்டு ஒருவாறு அமைதிபெற்ற பின்பு அந்த உற்சாகம் என்னிடமிருந்து நழுவி விட்டது. நான் கிருகத்தனாகிவிட்டதனால் என்னிடம் புதிய அபிவிருத்தி ஏதும் உண்டானதாகத் தெரியவில்லை. கல்யாணத்திலும் பொருள் வருவாயிலும் ஊர்ப் பிரயாணத்திலும் எனக்கு இலாபம் இருந்ததாகத் தோற்றவில்லை. எனக்கு ஒன்றுதான் நாட்டம். தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப்பசிக்கு உணவு; எவ்வளவுக்கெவ்வளவு நான் அதன் தொடர்பை அதிகப்படுத்திக்கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு உற்சாகம், நல்லது செய்தோமென்ற திருப்தி, இலாபமடைந்தோமென்ற உணர்ச்சி உண்டாகின்றன. அன்றும் சரி, இன்றும்சரி, இந்த நிலைமை மாறவே இல்லை.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.