யார் கவிஞன் ? – கவிஞர் முடியரசன்
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்
கைம்மாறு விழைந்து புகழ் பெறுதல் வேண்டி
மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை
மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்
தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்திவிட்டுத்
தேட்டையிடம் பாடுபவன் கவிஞன் அல்லன்
மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு
மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்
ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்
மேலோங்கு கொடுமைகளைக் காணும் போது
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்’
– கவிஞர் முடியரசன்
கவிஞர் முடியரசன் கவிதையைப் பெரிதும் பாராட்டியதுடன் இதன் 11 ஆவது வரியில் இருந்த தட்டச்சுப் பிழையைச் சுட்டிக்காட்டிய இனமான இயக்குநர் புகழேந்தி அவர்களுக்கு நன்றி. (பாடுபவன் என்பது பாடுபடுவன் எனத் தவறாக வந்திருந்தது. )
யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ஒவ்வொன்றும் நினைவில் கொள்ளவேண்டுவன.தற்காலத்தில் காதலையும் காமத்தையும் தேரில் அதாவது,கவிதைத்தேரில் ஏற்றி வளைய வளைய ஒரே இடத்தையேச் சுற்றிவருகிற வகையில் கவிஞர்களாகக் கொண்டாடப் படுபவர்களால் நிறைந்த இந்த கவிதைப் பரப்பில் இங்கே சுட்டிக்காட்ட ப் பட்ட அடையாள வரிகள் ஒவ்வொன்றும் உண்மையில் ஒரு கவிஞன் எப்படிப் பட்டவர்களுக்கு இருக்க வேண்டுமென்பதைத் தோலுரித்துக் காட்டுகின்றன.குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை.
வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாது)