( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்- -தொடர்ச்சி)

          இழுக்கல் நிலத்திடை இடர்ப்பட் டேகுவோன் 

          வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென  135

          வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி

தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட்

பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் ததூஉம்,

தாங்கா வேட்கை தாங்கவோன் றன்னைக்     

          கண்டு வெரீஇக் கற்றோர் பலர்தாம்       140

          மண்டும் படிப்பகம் மங்கைபுக் கதூஉம்,

மெல்லியல் அல்லியை மேவி விருப்பைச்

சொல்லி மணம்பெறத் துடித்துநின் றதூஉம்,

ஆங்கது கேட்ட அல்லி தெளிவுடன்         

பூங்கொடி நிலையினைப் புகன்றிருந் ததூஉம்,

145

          மங்கையின் மாற்றம் மதித்திடல் இன்றி

அங்குள படிப்பகம் அதனும் புகுந்திட

விரையும் காலை விஞ்சிய அறிவினர்

நிறையிடம் அதுவென நினைத்தகன் றதூஉம்,        

          அகன்றபின் அல்லியை அணுக, வெறுத்து அவள்     150

          புகன்றுபின் நல்லுரை புகட்டி நின்றதூஉம்,

துளக்குறு நெஞ்சம் துணையே யாக      

—————————————————————

          படிமிசை – நிலத்தின்மீது, காண்பான் – காண, வெரீஇ – அஞ்சி, மண்டும் – நிறையும், மாற்றம் – மறுமொழி.

—————————————————————

விளக்கிலா இருளில் வெய்துயிர்ப் புடனே

புல்லிதழ் மென்மலர் பொதுளிய பஞ்சணை   

          கல்லென வருத்தக் கண்படை பெறாஅது        155

          பொழுதுபுலர் காறும் புரண்டிருந் ததூஉம்,

எழுகதிர்ச் செல்வன் எழில்முகம் காட்டத்

தோமறு செல்வி தாமரைக் கண்ணி

காமம் கெடுத்திடக் கழற்றுரை மொழிந்ததூஉம்,    

          எஞ்சா துரைத்தபின் `ஏழிசை வல்ல        160

          வஞ்சீ! இன்னுமவ் வளரிளம் பூங்கொடி

நெஞ்சுவிட் டகன்றிலள் நிலைத்தனள் ஆயினும்

நெஞ்சு கொடுக்கிலள் நிலையாய் நின்றனள்;

கொஞ்சும் கிளிமொழி கொடும்நினை வதனால்     

          துஞ்சுவ தன்றித் துணைசெய் வோரை   165

          இன்னும் காண்கிலேன்’ என்றவன் இயம்ப;     

          `கொடுமொழி யிதனைக் கூறேல் பெரும!

விடுதுயர்! இனியுன் வேட்கை நிறைவுறும்

அஞ்சுதல் ஒழிமதி! ஆர்துணை என்றோர்        

          வெஞ்சொல் மொழிந்தனை! வஞ்சிஎன் துணையால்         170

          அழகிய பூங்கொடி ஆர்வம் தழைத்திடக்

கொழுகொம் பென்றுனைத் தழுவிட வரூஉம்;

காமம் ஒதுக்கிய கடவுளும் ஈங்கிலை

ஏமம் அஃதே ஈண்டுயிர் தமக்கெலாம்;   

          கடவுளும் மாந்தரும் கண்டுணர் காமம் 175

          இன்றெனின் உலகும் உயிரும் இன்றாம்;

அவளும் நீயும் அதன்வழிப் படாஅது

தவிர்தல் ஒல்லுமோ? தலைவ ஒன்றுகேள்!      

—————————————————————

          பொதுளிய – நிறைந்த, கண்படை – உறக்கம், பெறாஅது – பெறாமல், கழற்றுரை – இடித்துரை, துஞ்சுவது – இறப்பது. ஏமம் – இன்பம்.

—————————————————————

(தொடரும்)