(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக-தொடர்ச்சி)

அத்தியாயம் 8. கடல்நகரில் தங்கிய காதை
நகரத்தார் வேண்டுதல்

தாமரைக் கண்ணி தன்னொடு வந்த
தோமறு பூங்கொடி தூயநல் லுரையால்
திருந்திய மனத்தினர் திரள்கொடு வந்தே,
`இருந்திடல் வேண்டும் இன்னும் சின்னாள்
நின்னுரை கேட்டோர் நேரிய ராகிப் 5
புன்முறை நீங்கிப் புந்தி தெளிந்து
மல்கிருள் அகல மதியொளி பெற்று
நல்லுணர் வெய்தி நலம்பெறல் திண்ணம்
ஆதலின் நங்காய்! அருளுதி, நின்னகர்ப்
போதல் ஒழிமதி!’ எனுமுரை புகன்றனா 10

 இசைவு தருதல்     

 பக்கல் நிற்கும் கண்ணியைப் பார்த்தனள்

அக்கொடி தன்னுளம் அறிந்தவ ளாதலின்
தோமறு பணிசெயத் தூயவ ளாகிய
தாமரைக் கண்ணி தந்தனள் இசைவே;
ஆண்டிருந் தேகி அணிமலர்க் கண்ணி 15
மீண்டனள் மணிநகர்; மெல்லியல் அல்லி

 அல்லி வினவல்     

 ஈண்டிய அன்புளத் தெழிற்பூங் கொடியைக்

காண்டல் விருப்பொடு கடுகி வந்தனள்;
தோழியைக் காணாள் துயர்படர் நெஞ்சினள்
`ஆழி நடுநகர் ஆங்கண் சென்றீர்! 20
நீயோ தமியள் நின்றிடல் கண்டேன்!

ஆயே! என்றன் ஆருயிர்த் தோழி
யாண்டுளாள் நிகழ்ந்தது யாதென் றுரை’என


 தோமறு - குற்றமற்ற, திரள்கொடு - திரளாக, நேரியர் - நல்லவர், புன்முறை - தீயவழி, புந்தி - மனம், மதி - அறிவு, ஒழிமதி - தவிர்க்க, கண்ணி - தாமரைக்கண்ணி, ஈண்டிய - நிறைந்த, தமியள் - தனித்தவளாய்.   

++

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி